LOADING

Type to search

இலங்கை அரசியல்

மன்னார் தீவில் மக்களின் வாழ்வியலை பாதிக்கும் கணிய மணல் அகழ்வை அனுமதிக்க முடியாது என்கிறார் வி.எஸ்.சிவகரன்.

Share

(மன்னார் நிருபர் எஸ்.ஆர்.லெம்பேட்)

(15-02-2025)

மன்னார் தீவில் மக்களின் வாழ்வியலும்,எதிர்கால நலனையும் பாதிக்கின்ற கணிய மணல் அகழ்வுக்கு ஒரு போதும் அனுமதி வழங்க முடியாது எனவும் கணிய மணல் அகழ்வுக்கு சுற்றுச்சூழல் ஆய்வு அறிக்கையை வழங்க முன்னெடுக்கவுள்ள கள விஜயத்தை ஏற்றுக் கொள்ள முடியாது என மன்னார் பொது அமைப்புக்களின் ஒன்றிய தலைவர் வி.எஸ்.சிவகரன் தெரிவித்துள்ளார்.

மன்னாரில் உள்ள அலுவலகத்தில் 15ம் திகதி சனிக்கிழமை(15) மதியம் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,,,

மன்னார் தீவில் மூன்று திட்டங்கள் அரசினால் நடைமுறைப்படுத்தப்பட இருக்கும் சூழ்நிலையில் அதானியுடைய காற்றாலை மின் உற்பத்தி திட்டத்தை அதானி நிறுவனம் பின் வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது.ஆனால் அரசாங்கம் எதிர்வரும் வாரம் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக அறிகிறோம்.

மின்சாரத்தை கொள்வனவு செய்வதில் விலை நிர்ணயத்தில் ஏற்பட்ட முரண்பாடு,அத்திட்டத்தை மீளாய்வு செய்ய அரசு குழு ஒன்றை நியமித்திருந்த சூழ்நிலையிலே அதானி குழுவினரால் இவ்வாறான அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

முழுமையாக இத்திட்டத்தில் இருந்து அவர்கள் வெளியேறுவார்களா?,அல்லது எதிர்வரும் வாரம் இடம்பெற உள்ள பேச்சு வார்த்தையுடன் அவர்கள் மீண்டும் இணங்கி போவார்களா? என்ற சந்தேகம் எமக்கு எழுகின்றது.

எனவே மன்னார் தீவில் அவர்கள் காற்றாலை மின் உற்பத்தி திட்டத்தை அழுல் படுத்தக் கூடாது என்பதே எமது தொடர்ச்சியாக கோரிக்கையும்,ஜனநாயக போராட்டமுமாக அமைந்துள்ளது.

மக்களின் அடிப்படை இருப்பையும்,உணர்வையும், புரிந்து கொண்டு அவர்கள் மன்னார் தீவில் இருந்து வெளியேற வேண்டும்.அவர்கள் வெளியேறுவார்கள் என்று நாங்கள் நம்புகிறோம்.

கணிய மணல் அகழ்வு.

மேலும் இரண்டு தடவைகள் கணிய மணல் அகழ்வு குறித்து மத்திய சுற்றாடல் அதிகார சபையின் தலைமையில் சுமார் 23 திணைக்களங்கள் கள விஜயத்தை மேற்கொண்டு கணிய மணல் அகழ்வுக்கான சுற்றுச்சூழல் ஆய்வு அறிக்கையை வழங்க கள விஜயத்தை மேற்கொண்டு வருகை தந்திருந்த போது மக்களின் எதிர்ப்பு காரணமாக குறித்த இரு தடவைகள் அவர்களினால் நடைமுறை படுத்த முடியவில்லை.

அவர்கள் மீண்டும் கள விஜயத்தை மேற்கொள்ள பாதுகாப்பு கோரியுள்ளனர்.பாதுகாப்புடன் சென்று கள ஆய்வு மேற்கொள்ள அவர்கள் பாதுகாப்பை கோரியுள்ளனர்.நீதிமன்றத்தின் ஊடாக அவர்கள் நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக அறிகின்றோம்.

திங்கட்கிழமை அவர்கள் சட்ட ரீதியான நடவடிக்கைகளை மேற்கொண்டு புதன்கிழமை மன்னாரிற்கு 23 திணைக்களங்களும் வந்து கள ஆய்வு முன்னெடுக்க திட்டமிட்டுள்ளதாக அறிகின்றோம்.எனவே கனிய மணல் அகழ்வுக்கான கள ஆய்வில் ஈடுபட அவர்கள் வருகை தரக் கூடாது.மக்களின் விருப்பம் இன்றி அவர்கள் குறித்த நடவடிக்கையை முன்னெடுக்க கூடாது.

மன்னாரில் கடந்த ஒரு மாதத்திற்கு முன் மழை விட்டும் மன்னார் பிரதேச செயலாளர் பிரிவில் தேங்கியுள்ள மழை நீரை வெளி யேற்ற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

மேலும் பல்வேறு விதமான சுற்றுச்சூழல் தாக்கத்தையும் சமூக இருப்புக்கான கேள்விக் குறியையும்,மக்கள் வாழ்விடங்களில் இருக்க முடியாத ஒரு நிலைப்பாடும் காணப்படுகின்ற மையினால் இந்த பகுதியில் மண் அகழ்வு செய்யக் கூடாது என்கிற மக்களினுடைய போராட்டத்தை மதித்து அவர்களுடைய உணர்வுகளுக்கு செவி சாய்த்து இத் திட்டத்தில் இருந்து அவர்களும் வெளியேற வேண்டும்.

இவ்வாறு இன்றி அடாத்தாக இத்திட்டத்தை நடைமுறைப்படுத்த அவர்கள் வருவர்களாக இருந்தால் மன்னார் மக்கள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டார்கள்.அதற்கு எதிராக மாவட்டம் தழுவிய ரீதியில் பாரிய ஜனநாயகப் போராட்டத்தை மக்கள் முன்னெடுப்பார்கள்.

எனவே அரசு இந்த மக்களின் உணர்வுகளை புரிந்து கொண்டு,இத்திட்டங்களில் இருந்து அவர்கள் வெளியேற வேண்டும்.மேலும் கரையேற மணல் அகழ்வு செயல் திட்டத்தையும் அரசு கைவிட வேண்டும்.

இந்த மூன்று திட்டங்களையும் மன்னார் தீவு பகுதியில் இருந்து அவர்கள் கை விட்டு,வெளியேறி மக்களின் வாழ்வியல் இருப்புக்கும்,வாழ்வியல் சுகாதார சுற்றுச் சூழல் பாதிப்புக்களின் இருந்து அவர்களை பாதுகாத்துக் கொள்ளும் நிலைப்பாட்டிற்கு அரசு சாதகமான நிலைப்பாட்டை எடுக்க வேண்டும் என மன்னார் மக்கள் சார்பில் நாங்கள் இந்த கோரிக்கையை விடுக்கின்றோம்.என அவர் மேலும் தெரிவித்தார்.

குறித்த ஊடக சந்திப்பில் மன்னார் பிரஜைகள் குழுவின் தலைவர் அருட்தந்தை மாக்கஸ் அடிகளார்,மீனவ சங்க பிரதி நிதி என்.எம்.ஆலம் ஆகியோர் கலந்து கொண்டு கருத்து தெரிவித்தனர்.