மீனவர்கள் கைது விவகாரம் மத்திய அமைச்சருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்
Share

இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள மீனவர்களை உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்கக்கோரி மத்திய அமைச்சருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தை சேர்ந்த 32 மீனவர்கள் பேர் 5 விசைப்படகுகளில் வழக்கம்போல் மீன்பிடிக்க கடலுக்குச் சென்றனர். அப்போது அங்கு ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் இலங்கை கடற்பரப்பிற்குள் எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி மீனவர்கள் 32 பேரை கைது செய்தனர். மேலும் மீனவர்களின் 5 விசைப்படகுகளையும் பறிமுதல் செய்தனர். இந்த நிலையில், கைது செய்யப்பட்டுள்ள மீனவர்களை உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்கக்கோரி மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியிருப்பதாவது, “தமிழ்நாட்டு மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்படும் சம்பவங்களின் எண்ணிக்கை சமீப காலங்களில் கவலை அளிக்கக் கூடிய வகையில் அதிகரித்துள்ளது. ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து நேற்று (பிப்.220) மீன்பிடிக்கச் சென்ற 32 மீனவர்களையும் அவர்களது 5 மீன்பிடி விசைப்படகுகளையும் இலங்கை கடற்படையினர் இன்று (பிப்.23) கைது செய்யப்பட்டுள்ளனர்.
தமிழ்நாட்டு மீனவர்கள் கைது செய்யப்படுவதைத் தடுக்க இலங்கை அரசை வலியுறுத்த வேண்டும் என்று நான் பலமுறை கேட்டுக் கொண்ட போதிலும், இலங்கை கடற்படையினரின் கைது நடவடிக்கைகள் இன்னும் அதிக அளவில் தொடர்கிறது. இந்த ஆண்டில் மட்டும், 8 வெவ்வேறு சம்பவங்களில் 119 மீனவர்களும், 16 படகுகளும் இலங்கை கடற்படையினரால் சிறை பிடிக்கப்பட்டுள்ளனர். நீண்டகாலமாக நிலுவையில் உள்ள இந்தப் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு காண கூட்டு பணிக்குழுவை உடனடியாகக் கூட்ட வேண்டும் என்ற எனது முந்தைய கோரிக்கையை மீண்டும் வலியுறுத்துகிறேன். நமது மீனவ குடும்பங்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால், இக்கூட்டத்தைக் கூட்டி நிரந்தர தீர்வு காண வேண்டியது மிகவும் அவசியமானதாகும். எனவே நமது மீனவர்கள் கைது செய்யப்படுவதை தடுக்கவும், கைது செய்யப்பட்ட அனைத்து மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் இலங்கை அதிகாரிகளிடமிருந்து விரைவில் விடுவிக்கவும் வலுவான தூதரக முயற்சிகளை எடுக்க வலியுறுத்துகிறேன்” இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.