இஸ்ரேலுடனான போர் நிறுத்த பேச்சுவார்த்தை ரத்து – ஹமாஸ்
Share

இஸ்ரேல், ஹமாஸ் இடையே தற்காலிக போர் நிறுத்தம் அமலில் உள்ளது. இந்த போர் நிறுத்த ஒப்பந்தப்படி ஹமாஸ் தங்கள் பிடியில் உள்ள இஸ்ரேலிய பணய கைதிகளை விடுதலை செய்து வருகிறது. அதற்கு ஈடாக இஸ்ரேல் தங்கள் நாட்டு சிறைகளில் உள்ள பாலஸ்தீனிய கைதிகளை விடுதலை செய்து வருகிறது. அதேவேளை, தங்கள் பிடியில் உள்ள பணய கைதிகளில் கொல்லப்பட்ட 4 இஸ்ரேலியர்களின் உடலை கடந்த சில நாட்களுக்கு முன் ஹமாஸ் ஒப்படைத்தது. கொல்லப்பட்ட இஸ்ரேலியர்களின் உடல்கள் சவப்பெட்டியில் வைக்கப்பட்டு காசாவின் முக்கிய நகரில் மேடை அமைக்கப்பட்டு பின்னர் செஞ்சிலுவை சங்கம் மூலம் இஸ்ரேலிடம் ஒப்படைக்கப்பட்டது. இஸ்ரேலியர்களின் உடல்களை அவமதிக்கும் வகையில் காசாவில் அணிவகுப்பு நடத்தி ஒப்படைத்ததாக இஸ்ரேல் குற்றஞ்சாட்டியது. இது போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறும் செயல் என்றும் இஸ்ரேல் தெரிவித்தது. இதையடுத்து, நேற்று பணய கைதிகளில் மேலும் 6 பேரை ஹமாஸ் விடுதலை செய்தது. இந்த நடவடிக்கையின்போதும் காசாவில் மேடை அமைக்கப்பட்டு அணிவகுப்பு நடத்தப்பட்டு பணய கைதிகள் விடுதலை செய்யப்பட்டனர். இந்த நடவடிக்கையின்போது மேலும் 2 பணய கைதிகளை ஹமாஸ் ஆயுதக்குழு காரில் அழைத்து வந்துள்ளது. அந்த பணய கைதிகள் தங்களையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்கும்படி கெஞ்சுவது போன்ற காணொளியும் ஹமாஸ் ஆயுதக்குழு வெளியிட்டது.
இந்த நடவடிக்கைகளால் ஆத்திரமடைந்த இஸ்ரேல், போர் நிறுத்த ஒப்பந்தத்தை ஹமாஸ் மீறிவிட்டதாக குற்றஞ்சாட்டியது. மேலும், 6 பணய கைதிகளுக்கு ஈடாக இஸ்ரேலிய சிறைகளில் உள்ள பாலஸ்தீனியர்களில் 620 பேரை விடுதலை செய்ய மேற்கொள்ளப்பட்டிருந்த ஒப்பந்தத்தையும் தற்காலிகமாக நிறுத்தியது. பாலஸ்தீனிய கைதிகள் 620 பேரையும் இஸ்ரேல் விடுதலை செய்யவில்லை.
இந்நிலையில், பாலஸ்தீனிய கைதிகளை விடுதலை செய்யாத நிலையில் இஸ்ரேல் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறிவிட்டதாக ஹமாஸ் குற்றஞ்சாட்டியுள்ளது. பாலஸ்தீனிய கைதிகளை விடுதலை செய்யாதவரை இஸ்ரேலுடன் போர் நிறுத்த பேச்சுவார்த்தையில் ஈடுபடப்போவதில்லை என்று ஹமாஸ் தெரிவித்துள்ளது. போர் நிறுத்த பேச்சுவார்த்தையை ஹமாஸ் ரத்து செய்துள்ள நிலையில் பாதுகாப்புப்படையினர் தயார் நிலையில் இருக்கும்படி இஸ்ரேல் பிரதமர் உத்தரவிட்டுள்ளார்.