அறிஞர் பாலகிருஷ்ணன் தலைமையில் தமிழர் வரலாற்றின் புதிய பக்கங்களை உலகுக்கு வெளிக்காட்டட்டும் – மு.க.ஸ்டாலின்
Share

உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் தலைவர் பாலகிருஷ்ணன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார்.
உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் தலைவராக ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி ஆர்.பாலகிருஷ்ணனை நியமனம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டது. அவரது நியமனத்துக்கு பல்வேறு தரப்பினர் வரவேற்பு தெரிவித்துள்ளனர். இதனிடையே, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள ஆர். பாலகிருஷ்ணன் சென்னை தலைமைச்செயலகத்தில் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார். இந்தநிலையில், முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் எக்ஸ் தள பதிவில் கூறியதாவது: தமிழ்வழியில் படித்து, தமிழிலேயே குடிமைப் பணித் தேர்வெழுதி ஐஏஎஸ் ஆகி, தமிழாராய்ச்சியின் பரப்பைத் தமிழ்நாட்டையும் தாண்டி, ஏன் இன்றைய இந்திய நாட்டையும் தாண்டி அகலப்படுத்திய அறிஞர் பாலகிருஷ்ணன் அவர்கள் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளதையொட்டி மகிழ்ச்சி நிறைந்த மனத்தோடு வாழ்த்தினேன். 1812-இல் வெளியான திருக்குறளின் முதல் அச்சுப் பதிப்பை அன்பளிப்பாகத் தந்தார். அவர் பணி சிறந்து, தொல்தமிழர் வரலாற்றின் பல புதிய பக்கங்களை உலகுக்கு வெளிக்காட்டட்டும் என பதிவிட்டுள்ளார்.