அல்ஜசீராவில் பொறுப்புக்கூற மறுத்த ரணில் | யாழ்ப்பாணத்திலிருந்து நிலாந்தன் எழுதுகின்றார்
Share

சிங்கள பௌத்த அரசுத் தலைவர்கள், அவர்கள் யுத்த வெற்றிவாதிகளாக இருந்தாலும் சரி, அல்லது லிபரல் முகமூடி அணிந்தவர்களாக இருந்தாலும் சரி, அல்லது சமூக நீதி முகமூடி அல்லது மாற்றத்தின் முகமூடி அணிந்தவர்களாக இருந்தாலும் சரி, எல்லாருமே தமிழ் மக்களுக்கோ அல்லது இறந்த காலத்துக்கோ பொறுப்புக்கூற மாட்டார்கள் என்பதைத்தான் ரணில் விக்கிரமசிங்கவின் அல் ஜஸீரா நிகழ்ச்சி உலகத்துக்கு எடுத்துக் கூறியுள்ளது.
முதலாவதாக அந்த நிகழ்ச்சி எவ்வாறு கட்டமைக்கப்பட்டது என்பதைப் பார்க்க வேண்டும்.அது ஒரு நேர்காணல் என்பதை விடவும் குறுக்கு விசாரணையாகவே பெருமளவுக்கு அமைந்திருந்தது. மஹ்தி ஹசன் நன்கு வீட்டுவேலை செய்து கொண்டு வந்திருந்தார். விரல் நுனியில் தகவல்களை வைத்திருந்தார். புலம்பெயர்ந்த தமிழர்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்று தெரிந்திருந்தும் ரணில் அனாயாசமாகப் போய் மாட்டிக் கொண்டார். இனி எந்த ஒரு சிங்கள தலைவரும் இப்படிப்பட்ட நிகழ்ச்சிக்குப் போவதற்கு முன் ஒன்றுக்கு பல தடவை யோசித்து முடிவெடுக்க வேண்டிய ஒரு நிர்ப்பந்தத்தை ஏற்படுத்தியிருக்கும் நிகழ்ச்சி அது. புலம்பெயர்ந்த தமிழ் சமூகத்தின் பலத்தை ஒரு விதத்தில் அது காட்டியது.
ரணிலைச் சுற்றி வளைக்கும் கேள்விகள். அவர் கதைத்துக் கொண்டிருக்கும் பொழுதே மஹ்தி ஹசன் குறுக்கே பாய்ந்து கேள்விகளைக் கேட்கிறார். சில இடங்களில் ரணில் கூறும் பதில்களை பொருட்படுத்தாமலேயே கடந்து போகிறார். சில பதில்களுக்கு மறுத்தான்களை அனாயசமாக அள்ளி வீசுவிட்டு போனார். அந்த நிகழ்ச்சி முழுவதிலும் மஹ்தி ஹசன் ஒரு குறுக்கு விசாரணை செய்யும் அதிகாரியின் தோரணையிலேயே பெருமளவுக்கு நடந்து கொண்டார்.அந்த நிகழ்ச்சிக்கு கிடைத்த கவர்ச்சியும் அதுதான். தமிழ்த் தரப்பு அதை கொண்டாடுவதற்கு பிரதான காரணங்களில் அதுவும் ஒன்று.
ஆனால் மஹ்தி ஹசன் எவ்வளவுதான் விட்டுக்கொடுப்பற்றவராகக் காணப்பட்டாலும் ரணில் உணர்ச்சிவசப்படவே இல்லை என்பதனை பலரும் கவனிக்கத் தவறுகிறார்கள். ரணில் வெகு ‘கூலாக‘ பதில் கூறுகிறார். அவருடைய சிறிய தொந்தியில் வழுகும் கழுத்துப்பட்டியை இடைக்கிடை சரி செய்து நேராக்கியபடி மிகவும் ‘கூலாக‘அவர் பதில் கூறுகிறார்.
அவர் கூறும் பதில்களில் பல இக்கட்டுரையின் நோக்கு நிலையில், அதாவது தமிழ் நோக்கு நிலையில் மோசமானவை. ஆனால் ரணில் மிகவும் கூலாக சிரித்துக்கொண்டே பதில் சொல்லுகிறார். சிரித்துக் கொண்டே தன்னை காந்தியோடு ஒப்பிடுகிறார். சிரித்துக்கொண்டே இலங்கை ஒரு வன்முறை இல்லாத நாடு என்று கூறுகிறார். சிரித்துக்கொண்டே சில கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாது என்று கூறுகிறார். அந்தப் பேட்டிக்குள் முக்கியமாகக் கவனிக்கப்பட வேண்டிய விடயம் அது. அணில் மிகவும் கூலாக இருந்தார்.
அதே சமயம் அவர் சொன்ன பதில்கள் பலவற்றிலிருந்து உலக சமூகமும் குறிப்பாக ஐநாவும் தமிழ் மக்களும் ஒரு தெளிவான செய்தியைப் பெறக்கூடியதாக இருந்தது. அது என்னவென்றால், சிங்கள பௌத்த அரசுத் தலைவர்கள் யாராக இருந்தாலும் பொறுப்புக் கூற மாட்டார்கள் என்பதுதான்.
2015 ஆம் ஆண்டு பொறுப்புக் கூறலுக்கான ஐநாவின் தீர்மானத்திற்கு இணையனுசரணை வழங்கியது ரணில் விக்ரமசிங்கதான். நிலைமாறு கால நீதிக்கான அந்த தீர்மானத்துக்கு ரணில்– மைத்திரி அரசாங்கம் இணை அனுசரணை வழங்கியது. அதற்கு முன்னரும் பின்னரும் நிறைவேற்றப்பட்ட ஐநா தீர்மானங்களுக்கு எந்த ஒரு இலங்கை அரசாங்கமும் இணை அனுசரனை வழங்கவில்லை. மட்டுமல்ல,அந்த தீர்மானங்களுக்கு எதிராகவே காணப்பட்டன. ஆனால் ஒரே ஒரு தீர்மானம், அதுவும் பொறுப்புக் கூறலுக்கான தீர்மானம்,அதற்கு இணை அனுசரணை வழங்கிய ஒரே ஒரு தலைவர், ஒரு பகிரங்க நிகழ்வில் வைத்துப் பொறுப்புக்கூறத் தயாரில்லை என்பதனை வெளிப்படுத்துகிறார். அப்படியென்றால் ஐநாவில் இலங்கை அரசாங்கம் வழங்கிய இணை அனுசரணைக்குப் பொருள் என்ன?
முன்னாள் ஐநா பொதுச் செயலர் பான் கி மூன் கேட்டுக் கொண்டதற்கு இணங்க மகிந்த விசாரணைக் குழுக்களை உருவாக்கினார்.ஆனால் அவை உண்மையைக் கண்டுபிடிக்கவில்லை. அல்லது அவை கண்டுபிடித்த அற்ப உண்மைகளையும் கூட மகிந்த ஏற்றுக்கொள்ளவில்லை. ஆனால் ரணில் அதைவிட ஒரு படி மேலே சென்று ஒரு ஐநா தீர்மானத்துக்கு இணை அனுசரணை வழங்கினார். அதுவும் இலங்கைத் தீவில் நிலைமாறு கால நீதியை ஸ்தாபிப்பதற்கான அதாவது பொறுப்புக் கூறலுக்கான தீர்மானம். ஆனால் அவரும் அந்தத் தீர்மானத்துக்கு விசுவாசமாக இருக்கவில்லை. ஐநாவைப் பேய்க்காட்டுவதற்காகத்தான் அவர் அவ்வாறு இணை அனுசரனை வழங்கினார் என்பதைத்தான் அல்ஜஸீராவின் “ஹெட் ரூ ஹெட் “நிகழ்ச்சி வெளிப்படுத்தியது.
ஆனால் அது அதற்காக அவர் வெட்கப்படவில்லை. மிகவும் கூலாக, சிரித்துக்கொண்டு அதைச் செய்தார் என்பதுதான் இங்குள்ள பயங்கரமாகும். ஜேவிபியின் இரண்டாவது ஆயுதப் போராட்டத்தின் போது சிங்கள மக்கள் சித்திரவதை செய்யப்பட்ட, கொல்லப்பட்ட குற்றச்சாட்டுகள் தொடர்பாகவும் சரி, தமிழ் மக்களுக்கு எதிராக நிகழ்ந்த இன அழிப்புக் குற்றச்சாட்டுகளுக்கும் சரி, ஈஸ்டர் குண்டு வெடிப்புத் தொடர்பான குற்றச்சாட்டுகளுக்கும் சரி,அவர் பொறுப்புக் கூறத் தயாராக இருக்கவில்லை. பொறுப்பற்ற தனமாக கூலாகப் பதில் சொன்னார்.
இலங்கைத் தீவின் வரலாற்றில் ஒரு முன்னாள் அரசத் தலைவர் அதுபோல எங்கேயும் அவமானப்படுத்தப்பட்டதாக எனக்கு நினைவில்லை. ‘உன்னுடைய வயதை விட என்னுடைய அரசியல் வாழ்வின் காலம் அதிகமானது என்று ரணில் சிரித்துக் கொண்டு செல்லலாம். ஆனால் அவ்வளவு அனுபவசாலியான அவர் அதுபோல வேறு எங்கேயும் அவமானப்படவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். அதுதான் தமிழ் மக்களை அதிகம் சந்தோஷப்படுத்திய விடயம்.
அதாவது சிங்கள பௌத்த அரசு கட்டமைப்பை அம்பலப்படுத்திய ஆகப் பிந்திய நிகழ்ச்சி அது. சிங்கள பௌத்த அரசு தலைவர்கள் தமிழ் மக்களுக்கும் பொறுப்பு கூற மாட்டார்கள்; கொல்லப்பட்ட சிங்கள மக்களுக்கும் பொறுப்பு கூற மாட்டார்கள்; முஸ்லிம்களுக்கும் பொறுப்பு கூற மாட்டார்கள்; மட்டுமல்ல சிங்கள கத்தோலிக்கர்களுக்கும் பொறுப்பு கூற மாட்டார்கள் என்பது அங்கே தெளிவாகத் தெரிந்தது. அண்மை காலங்களில்,தையிட்டி விகாரை விவகாரத்துக்கு அடுத்ததாக, சிங்கள பௌத்த அரசுக் கட்டமைப்பு பொறுப்புக் கூறாது என்று தமிழ் மக்கள் நம்பத் தேவையான விடயங்களை அதிகமாக வெளிப்படுத்திய ஒரு நேர்காணல் அது.
எல்லாக் குற்றங்களையும் செய்துவிட்டு அல்லது குற்றவாளிகளைக் காப்பாற்றிக் கொண்டு கூலாக அவர் சொன்ன பதில்கள் யாவும், இன அழிப்புச் செய்தவர்களையும் தமது அரசியல் வெற்றிகளுக்காக முஸ்லிம் மக்களை பலியிட்டவர்களையும் அவர் பாதுகாக்கிறார் என்று நம்பப் போதுமானவைகளாக இருந்தன. அதாவது குற்றங்களைப் பாதுகாக்கும் குற்ற மயப்பட்ட ஒரு அரசுக் கட்டமைப்புக்கு அவர் தலைவராக இருந்திருக்கிறார் என்பதை அவர் வெளிப்படுத்தினாரா?
மகா சங்கத்துக்கு விசுவாசமாக அவர் கூறிய பதிலில் தன்னை ஒரு சிங்கள பௌத்தனாகப் பிரகடனப்படுத்துகிறார். அங்கே அவருடைய லிபரல் முகமூடி பாரதூரமாகக் கிழிகிறது. ஆனால் அவர் கூலாகப் பதில் கூறுகிறார்.
ஆனால் இதில் தமிழ் மக்களுக்குப் புதிதாக எதுவும் இல்லை. ஏனென்றால் ரணிலைப் பற்றி ஏற்கனவே பெரும்பாலான தமிழ் மக்கள் மத்தியில் மிகப் பலமான ஒரு படிமம் உண்டு. அன்ரன் பாலசிங்கம் அவரை நரி என்று அழைத்ததை தமிழர்களில் பெரும்பாலானவர்கள் திரும்பத் திரும்ப மேற்கோள் காட்டுவது அந்த அடிப்படையில்தான். எனவே ரணில் யார் என்பது தமிழ் மக்களுக்குத் தெரியும்.
ஆனால் இங்குள்ள கேள்வி என்னவென்றால் ரணிலோடு இணைந்து நல்லாட்சிக் காலகட்டத்தில் அதாவது 2015 இல் இருந்து 2018 வரையிலுமான காலப்பகுதியில், நிலைமாறு கால நீதிக்காக உழைத்த தமிழ்ப் பிரதிநிதிகள் இருக்கிறார்களே, அவர்கள் இதற்கு என்ன பதில் சொல்லப் போகிறார்கள்? அவர்கள் ரணிலை மட்டும் பாதுகாக்கவில்லை, கடந்த ஜனாதிபதித் தேர்தலின்போது சஜித்தையும் பாதுகாத்தார்கள். சஜித்தும் ரணிலைப்போலதான்.
கடந்த செப்டம்பர் மாதம் ஜனாதிபதித் தேர்தல் பிரச்சாரங்கள் நடந்து கொண்டிருந்த அதே காலப்பகுதியில்தான் ஐநா கூட்டத் தொடரும் நடந்தது. அப்பொழுது சஜித், ஐநா தீர்மானங்களுக்கு எதிரான நிலைப்பாட்டைத்தான் கொண்டிருந்தார். ரணில் மட்டுமல்ல சஜித்தும் பொறுப்புக்கூறத் தயார் இல்லை. அதுவும் ஜனாதிபதித் தேர்தலில் அவர் தமிழ் வாக்குகளை எதிர்பார்த்துக் கொண்டிருந்த அதே காலகட்டத்தில், ஐநா மனித உரிமைகள் கூட்டத் தொடர் நடந்து கொண்டிருந்தது. அக்காலகட்டத்தில்தான் சஜித் பொறுப்புக்கூறல் தொடர்பில் பன்னாட்டுப் பொறிமுறைகளுக்கு எதிராகத் தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்தியிருந்தார். இது நல்லூர் கிட்டுப் பூங்காவில் நடந்த, பொது வேட்பாளருக்கான கடைசிப் பிரச்சார கூட்டத்தில், மேடையில் வைத்துப் பகிரங்கமாகச் சுட்டிக்காட்டப்பட்டது.
ஆனால் தமிழ் மக்களின் வாக்குகளை சுமந்திரன் சஜித்துக்கு வாங்கி கொடுத்தார். தேசத் திரட்சிக்காக, பொது வேட்பாளராக நிறுத்தப்பட்ட அரிய நேத்திரனை சுமந்திரனுக்கு விசுவாசமான மத்திய குழு கட்சியை விட்டு நீக்கியிருக்கிறது. அதாவது சிங்களத் தலைவர்கள் இறந்த காலத்துக்கு பொறுப்புக்கூறத் தயார் இல்லை. தமிழ் மக்களின் வாக்குகளை அவர்களுக்குத் திருப்பும் தமிழ் தலைவர்களும் தமிழ் மக்களுக்குப் பொறுப்பு கூறத் தயாரில்லை.