LOADING

Type to search

இலங்கை அரசியல்

ஐ நா கூட்டத்தில் பங்கேற்ற இலங்கை பிரதிநிதிகள் தொடர்பில் சுயாதீன வல்லுநர்கள் கேள்வி

Share

இலங்கை மீண்டும் பன்னாட்டு தாக்குதலுக்கு இலக்காகியுள்ளது.

ஐ நா மனித உரிமைகள் ஆணையத்தின் உறுப்பு நாடுகளில் சர்வதேச சட்டங்கள் மற்றும் பொது அரசியல் உரிமைகளைக் கண்காணிக்கும் சுயாதீன வல்லுநர்கள் அந்த ஆணையத்திற்கு இலங்கை அனுப்பியுள்ள குழுவைப் பற்றி கேள்விகளை எழுப்பியுள்ளனர்.

ஜெனீவாவில் தற்போது நடைபெறும் ஐ நா மனித உரிமைகள் கூட்டத்திற்கு இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தும் 28 உறுப்பினர்கள் கொண்ட குழுவில் ஒரு உறுப்பினராக தேசிய புலனாய்வு அமைப்பின் தலைவர் மேஜர் ஜெனரல் ஜீவக ருவான் குலதுங்க கலந்து கொள்கிறார்.

மேஜர் ஜெனரல் குலதுங்க , பிரித்தானியவைத் தளமாகக் கொண்டுள்ள சானல் 4 தொலைக்காட்சியில்- போர்க் குற்றங்கள் குறித்து இலங்கையில் ஜனநாயகத்திற்கான ஊடகவியலாளர்கள் அமைப்பு (JDS)  மறுக்க முடியாத சாட்சிகள் ஒளிபரப்பான பிறகும்- இலங்கை இராணுவம் போர் குற்றங்கள் ஏதும் செய்யவில்லை என்று மறுத்த இராணுவ ஆணைக்குழுவின் உறுப்பினராக இருந்தார்.

இலங்கையில் “தொடர்ச்சியாக மிகவும் கொடூரமான சித்திரவதை” செய்யும் ஒரு இராணுவ முகாமை நடத்திய குற்றச்சாட்டில்  ஜீவக ருவான் குலதுங்க மற்றும் வேறு நால்வர் விசாரிக்கப்பட வேண்டும் என்று கடந்த 2017 ஆம் ஆண்டு, உண்மைக்கும் நீதிக்குமான சர்வதேச செயல்திட்டம் (ITJP) கோரியிருந்தது.

குறிப்பிட்ட அந்த முகாம் ஜோசப் முகாம் என்றழைக்கப்பட்ட வவுனியாவிலிருந்த பாதுகாப்பு படை முகாமாகும் (SFHQ/W). மோசமான சித்திரவதை மற்றும் பாலியல் வன்செயலிற்காக அறியப்படும் அந்த முகாமிற்கு 2016-17 ஆம் ஆண்டு மேஜர் ஜெனரல் தலைவராக இருந்தார்.

2016 ஆம் ஆண்டு இடம்பெற்றவை தொடர்பில் ஜெனீவாவில் குறிப்பிட்ட கேள்விகள் இருந்தன.

”2016ஆம் ஆண்டு முதல் பாதுகாப்புப் படைகள் ஆட்கடத்தல், சட்டவிரோதமாகத் தடுத்து வைத்தல், சித்திரவதை, ஆண்கள் மற்றும் பெண்கள் மீது பாலியல் பலாத்காரம் செய்வதாக வந்துள்ள அறிக்கைகள் மற்றும் அப்படியான வழக்கங்கள் இன்னும் வடக்கில் அரசால் தொடரக் கூடும் என்ற கவலைகள் குறித்து பதிலளிக்கவும் மேலும் அப்படியான குற்றச்சாட்டுகள் தொடர்பிலான விசாரணைகள் மற்றும் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது குறித்து தகவல் அளிக்கவும்” என்று ஐ நா மனித உரிமைகள் ஆணையம் இலங்கையிடம் கோரியது. ஆனால் நேரடியாக பதிலளிப்பதற்கு பதிலாக இலங்கை அரசு நாட்டின் சட்டங்கள் பற்றி பேசியது.

“பாதுகாப்பு படைகளின் ஈடு பாடு குறித்த குற்றச்சாட்டுக்கள் தொடர்பில், நாட்டின் பொதுச் சட்டங்களிற்கு கீழ் சித்திரவதைக்கு எதிரான பரிகாரங்கள் கிடைப்பதற்கு அப்பாற்பட்டு, குற்றமிழைத்ததாக கூறப்படுபவர்கள் மீது இராணுவச் சட்டம், கடற்படைச் சட்டம் மற்றும் விமானப்படைச் சட்டம் ஆகியற்றின்   இராணுவச் சட்டங்கள் கீழும் இராணுவ நீதிமன்ற விசாரணை நடவடிக்கை எடுக்கப்படலாம்” என்று இலங்கை கூறியது.

ஜோசப் முகாமிற்கு பொறுப்பதிகாரியாக குலதுங்க இருந்த காலத்தில்  குறைந்தது மூவர் சித்திரவதை செய்யப்பட்டதற்கான ஆதாரங்கள் தம்மிடம் உள்ளதாக ஐ டி ஜே பி கூறுகிறது-அந்த மூவரும் கடுமையாகச் சித்திரவதை செய்யப்பட்டு பாலியல் வன்செயலிற்கு உள்ளாக்கப்பட்டனர். அவர்கள் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டவர்கள் மட்டுமல்ல அவர்கள் மற்றவர்களில் ஓலங்களிற்கு சாட்சிகளாகவும் உள்ளனர்.  ”ஆண் மற்றும் பெண் இருபாலரும், சிலர் அருகிலிருந்த சிறைக் கொட்டில்களில் அழுதும் ஓலமிடுவதையும் நான் கேட்டேன்” என்று உயிர் தப்பிய ஒருவர் கூறினார்.

மனித உரிமைகள் தொடர்பான ஒரு கூட்டத்திற்கு புலனாய்வு பிரிவின் தலைவரை அனுப்பியது குறித்தும் செயற்பாட்டாளர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். மனித உரிமைகள் பாதுகாவலர்களை அச்சுறுத்தவா அது என்று அவர்கள் வினவுகின்றனர்.

ஐ நா கூட்டங்களிற்கு சர்ச்சைக்குரிய வகையில் பாதுகாப்புப் படை அதிகாரி ஒருவரை அனுப்பியதற்காக இரண்டாவது முறையாக ரணில் விக்ரமசிங்கவின் நிர்வாகம் விமர்சனத்திற்கு ஆளாகியுள்ளது.

கடந்த 2016இல், சித்திரவதைக்கு எதிரான ஐ நா குழுவின்(UNCAT) விசாரணையில் இலங்கையில் தேசிய புலனாய்வு முகமையின் தலைவர் சிரிச மெண்டிஸ் இறுக்கமாக அமர்ந்திருந்தார். நாட்டின் குற்றப் புலனாய்வு விசாரணைப் பிரிவு (CID) மற்றும் பயங்கரவாத தடுப்பு விசாரணைப் பிரிவு (TID) ஆகியவை போர்க்காலம் மற்றும் அதற்குப் பின்னரான காலப்பகுதியில் அவரின் கீழ் இருந்தது. அந்த சமயத்தில் இடம்பெற்ற சித்திரவதை மற்றும் பாலியல் வன்செயல் தொடர்பிலான குற்றச்சாட்டுகள் தொடர்பில் அவர் விசாரிக்கப்பட்டார்.

அந்த சமயத்தில் தற்போதைய ஜனாதிபதி விகரமசிங்க ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் கீழ் பிரதமராக இருந்தார்.

சி ஐ டி அல்லது டி ஐ டி ஆகிய பதவிகளில் அவர் இருந்த காலத்தில் இடம்பெற்ற குற்றங்களிற்கான நீதிமன்றத்தின் முன்னர் அவர் நிறுத்தப்படவில்லை. பின்னர் 2019 ஆம் ஆண்டு நாட்டின் புலனாய்வுப் பிரிவின் தலைவர் பதவியிலிருந்து விலகினார். அதற்கு சில நாட்களிற்கு முன்னர் உயிர்த்த ஞாயிறன்று இடம்பெற்ற குண்டு வெடிப்புகள் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த நாடாளுமன்ற தேர்வுக் குழுவின் முன்னர் நாட்டில் தேவாலயங்கள், ஹொட்டல்கள் மற்றும் இந்திய உயர்ஸ்தானிகர் அலுவலகம் ஆகியவற்றிற்கு இருந்த அச்சுறுத்தல் குறித்து தான் அறிந்திருந்ததாகத் தெரிவித்திருந்தார்.