LOADING

Type to search

இலங்கை அரசியல்

முறிகண்டிப் பிள்ளையார் வழக்கு தள்ளுபடி – அபிவிருத்திகளை துரிதப்படுத்த அரச அதிபர் நடவடிக்கை

Share

12 வருடமாக இடம்பெற்ற திருமுறிகண்டிப் பிள்ளையார் ஆலய உரிமை தொடர்பான வழக்கு நேற்று செவ்வாய்க்கிழமை உயர் நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது

திருமுறிகண்டிப் பிள்ளையார் ஆலயம் 2009 ஆம் ஆண்டு யுத்தம் முடிவுற்றதும் பராமரிப்புக்காக இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டது. தற்போது இந்த ஆலயம் இந்துப் பண்பாட்டு நிதியத்தின் மேற்பார்வையில் இயங்கி வருகின்றது.

கோவில் வருமானத்தில் ஒரு பகுதி வன்னிப்பிராந்தியத்தில் இந்து சமய வளர்ச்சிக்காக இந்துப் பண்பாட்டு நிதியத்தின் மூலம் செலவிடப்படுகிறது.

திருமுறிகண்டிப் பிள்ளையார் கோவிலின் பரம்பரை அறங்காவலர் என்று கூறிக்கொள்ளும் ஒருவரால், இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தினால் நிர்வகித்து வரும் இவ் ஆலயத்தினை தன்னிடம் மீள ஒப்படைக்குமாறு நீதிமன்றத்திற்கு உத்தரவிடக் கோரி 2011 ஆம் ஆண்டு அடிப்படை உரிமை மனு தாக்கல் செய்தார்.

நீண்ட காலமாக இடம்பெற்ற இவ்வழக்கு இன்றயதினம் மூவர் அடங்கிய உயர்நீதிமன்ற நீதிபதிகளால் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. குறித்த ஆலயம் அமைந்துள்ள ஆலய காணி அரச காணி என்பதால் தனி நபர் ஒருவர் ஆலயத்திற்கு உரிமை கொண்டாட முடியாது.

நீண்ட காலமாக இவ் வழக்கு இடம்பெற்று வந்ததால் குறித்த பிரதேசத்தில் அடிப்படை சுகாதார வசதிகள், உட்கட்டுமானப் பணிகள் மற்றும் பிரதேசத்தை அழகுபடுத்தும் பணிகள் மேற்கொள்வதற்கு தடை ஏற்பட்டது.

இதன்போது கருத்துத் தெரிவித்த முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க உமாமகேஸ்வரன், ஆலய உரிமை தொடர்பான வழக்கு உயர் நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதால் இப்பகுதியை துரிதமாக அபிவிருத்தி செய்யும் பல்வேறு திட்டங்களை செற்படுத்தவுள்ளதாக தெரிவித்தார்.