LOADING

Type to search

இந்திய அரசியல்

திருப்பதி லட்டு விவகாரம்: திண்டுக்கல் நெய் நிறுவனம் மீது வழக்குப்பதிவு

Share

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு, பிரசாதங்களுக்கு பயன்படுத்தப்பட்ட நெய்யில் விலங்குகள் கொழுப்பு கலப்படம் செய்யப்பட்டதாக பெரும் சர்ச்சை எழுந்தது. அந்தக் கலப்பட நெய்யை விதிமுறைகளுக்கு மாறாக திருப்பதி தேவஸ்தானத்துக்கு தமிழகத்தில் திண்டுக்கல்லில் உள்ள ஏ.ஆர். டெய்ரி நிறுவனம் வினியோகம் செய்ததாகக் கூறப்படுகிறது. திருப்பதி தேவஸ்தானத்துக்கு கலப்பட நெய் வினியோகம் செய்த திண்டுக்கல் ஏ.ஆர். டெய்ரி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி திருப்பதி கிழக்குப் காவல் நிலையத்தில் திருப்பதி தேவஸ்தானத்தின் கொள்முதல் பிரிவு பொது மேலாளர் முரளிகிருஷ்ணா புகார் அளித்துள்ளார். அதில் இந்த (2024) ஆண்டு மே மாதம் 15-ந்தேதி நெய் வினியோகம் செய்ய ஆர்டர் செய்யப்பட்டது. அதன்பேரில் தமிழ்நாடு மாநிலம் திண்டுக்கல்லை சேர்ந்த ஏ.ஆர். டெய்ரி நிறுவனம் கடந்த ஜூன் மாதம் 12, 20, 25 மற்றும் ஜூலை மாதம் 6 மற்றும் 12-ந்தேதிகளில் 5 டேங்கர்களில் திருப்பதி தேவஸ்தானத்துக்கு நெய் சப்ளை செய்தது.

இதற்கிடையே, திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தயாரிக்கப்படும் லட்டு பிரசாதத்தின் தரம் குறித்து தேவஸ்தானத்துக்கு தொடர்ந்து புகார்கள் வந்தன. அதன்பேரில் ஜூலை மாதம் 6 மற்றும் 12-ந் தேதிகளில் ஏ.ஆர். டெய்ரி வினியோகம் செய்த நெய்யை திருப்பதி தேவஸ்தானம் தேசிய பால் பொருட்கள் ஆய்வகத்துக்கு பரிசோதனைக்காக அனுப்பி வைத்தது. அந்த ஆய்வகம் நடத்திய பரிசோதனையில் நெய்யில் தாவர எண்ணெய் மற்றும் விலங்குகளின் கொழுப்பு கலந்திருப்பதாக உறுதி செய்தது. எனவே விதிமுறைகளுக்கு மாறாக திருப்பதி தேவஸ்தானத்துக்கு கலப்பட நெய் வினியோகம் செய்த ஏ.ஆர்.டெய்ரி நிறுவனம் மீது திருப்பதி கிழக்குப் காவல்துறை உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகாரில் கூறப்பட்டுள்ளது. இந்த நிலையில், திருப்பதி தேவஸ்தானம் அதிகாரி அளித்த புகாரின் அடிப்படையில் திண்டுக்கல் ஏ.ஆர்.டெய்ரி நிறுவனம் மீது திருப்பதி காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.