LOADING

Type to search

இலங்கை அரசியல்

நாடாளுமன்ற தேர்தலில் மக்கள் சிந்தித்து வாக்களிக்க வேண்டும் என்று யாழ் சர்வமத பேரவை வேண்டுகோள்

Share

நடராசா லோகதயாளன்

வாழ்வை அழிக்கும் ஏமாற்றத்தை நிராகரித்து, வாழ்வை உறுதி செய்யும் நல்மாற்றத்தை நோக்கி வாக்களிக்க வேண்டும் என யாழ் மாவட்ட சர்வ மத பேரவையின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் பாராளுமன்ற பொதுத்தேர்தல் தொடர்பாக யாழ் மாவட்ட சர்வ மத பேரவையினர் நேற்றைய தினம் ஓர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர். அந்த அறக்கையில்,

எமது அன்புக்குரிய தமிழ் மக்களே, அரசியற்கட்சிளின் தலைவர்களே,

வாழ்வை உறுதி செய்யும், நீதியான சூழ்நிலை மையமான அரசியற் தெளிவை அருளும், எல்லாம் வல்ல கடவுளுடைய இறையருள் நம்மனைவரோடும் நிலைத்திருக்கட்டும். தீமைகளை ஒற்றுமையோடு எதிர்க்கவும், அனைவரும் வாழ்வுரிமையோடு வாழவும்; இயல்பாக பயணிக்க, வாக்களிக்க கடவுள் வழிநடத்தட்டும்.

யாழ் மாவட்ட சர்வ மத பேரவையாக, நடைபெறவுள்ள பாராளுமன்ற பொதுத்தேர்தலில், தமிழ் மக்கள் தமது பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை இயல்பாக வாழ்வுரிமையுடன் வெளிப்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்துகிறோம். எந்தவிதமான ஏமாற்றங்களுக்கோ, போலித்தனங்களுக்கோ இடங்கொடுக்கக்கூடாது. தமிழரின் அபிலாசைகளை நிறைவேற்ற, வரலாற்றை மீளநோக்கி, நீண்டகால, பேண்தகு நோக்கில் மக்களுடைய மேம்பாட்டுக்காக, வாக்களிக்கும் கடமையை பொறுப்புடன் மேற்கொள்ள வேண்டும் என்பது முக்கியம்.

நாடு சுதந்திரமடைந்த காலத்திலிருந்து, சுதந்திரமான வாழ்வுக்கான ஏக்கம் அனைவருடைய இதயங்களிலும் உள்ளது. இனம், மதம், மொழி… அடிப்படையில் எந்த ஒடுக்குமுறைக்கும், அடக்குமுறைக்கும் இடமில்லை. ஊழலற்ற, ஏற்றத்தாழ்வற்ற, நீதியான, சமத்துவமான வாழ்வுக்கான போராட்டம் இன்றும் தொடர்கிறது. இதற்கு தமிழ் மக்கள், அவர்களுக்கே உரித்தான வரலாற்றுக் கடமையை பொறுப்புடன் மேற்கொள்ள வேண்டும்.

யாழ் மாவட்ட தமிழ் மக்களுக்;கான பாராளுமன்ற ஆசனங்கள் ஏழிலிருந்து ஆறாக குறைந்துள்ளமை அனைவரும் அறிந்ததே. யாழ்ப்பாணத்தில், தமிழ் கட்சிகள், தமக்குள் கசப்பை வளர்த்து, ஒற்றுமையின்றி, பிளவுபட்டு, தமிழ் மக்களுக்கான பாராளுமன்ற ஆசனங்கள் குறைய சந்தர்ப்பத்தை ஏற்படுத்திவிடக்கூடாது. கட்சி அரசியல் மக்களுடைய வாழ்வுரிமை சார் உரிமையை பாதித்துவிடக்கூடாது.

நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலின் முடிவை நோக்கி, எவரும் திசை தெரியாதவர்களாகி விடக்கூடாது. காலணித்துவ வாதிகளிடமிருந்து, 1948 இல் சுதந்திரம் பெற்ற பின்னர், எதிர்கொண்ட வரலாற்றையும், படிப்பினைகளையும் மனதிற்கொண்டு, ஏமாற்றங்களை கடந்து, ஆக்கபூர்வமான மாற்றங்களை நோக்கி கூட்டாக ஒற்றுமையுடன் பயணிக்கவேண்டும். பிளவுபட்டு, பிரக்ஞையிழந்து, யாரும், எடுப்பார் கைப்பிள்ளையாகி விடக்கூடாது. அதனை வரலாறு ஒரு நாளும் மன்னிக்காது. மனித நேயத்துடனும் மனித மாண்புடனும், காத்திரமான எதிர்காலத்தை நோக்கி பேராட வேணடு;ம். தமிழ் மக்களைப் போலவே முஸ்லீம் மக்களுடையதும் ஏனைய தமிழ் பேசும் மக்களுடையதும் அபிலாசைகளும் வாழ்வுரிமைகளும் மதிக்கப்படவேண்டுமேன வலியுறுத்துகிறோம்.

நவம்பர் 14 இல் நடைபெற திட்டமிடப்பட்டுள்ள பொதுத்தேர்தல் மூலம் தமிழ் மக்களுடைய பாராளுமன்ற பிரதிநிதித்துவம் உறுதி செய்யப்படுவதோடு, பொருத்தமான தூரநோக்கும், மக்கள் பணிக்கான அர்ப்பணிப்பும், மிக்க இளைய தலைமுறையை காத்திரமான அரசியல் தலைவர்களாக்க வேண்டும். அனுபவம் மிக்க அரசியல் தலைவர்கள் ஆலோசனைகளை பொதுவெளியில் பகிர்ந்து, ஆளுமைமிக்க அரசியல் சமூகத்தை உருவாக்கட்டும்.

தமிழ் மக்களைப் போலவே தமிழ் பேசும் முஸ்லீம் மக்களுடைய வாழ்வுரிiயையும் நாம் மதிக்கிறோம். அவர்களுடைய வாழ்வும் மதிக்கப்படவேண்டும் என்பதை வலியுறுத்துகிறோம்.

எல்லாரும் எல்லா வளங்களுடனும், வரலாற்று அடையாளத்துடனும், மனித மாண்புடனும் வாழ இத்தேர்தலை பயன்படுத்த இறையருள் அனைவருக்கும் கிடைக்கட்டும் என்றுள்ளது.