LOADING

Type to search

இலங்கை அரசியல்

“வடக்கு மாகாண அபிவிருத்திக்கான ஒத்துழைப்புகளை தொடர்ந்து வழங்கும்”

Share

இலங்கைக்கான நோர்வே தூதுவர், வடக்கு ஆளுநரிடம் தெரிவிப்பு

இலங்கைக்கான நோர்வே தூதுவர் May-Elin Stener, வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் அவர்களை 05-05-2024 அன்று சந்தித்து கலந்துரையாடினார். வடக்கு மாகாண ஆளுநரின் செயலகத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது.

வடக்கு மாகாணத்தில் முன்னெடுக்கப்படும் மீள்குடியேற்ற நடவடிக்கையின் முன்னேற்றங்கள், காணி விடுவிப்பு, கண்ணிவெடி அகற்றல் செயற்பாடுகள், சுற்றுலாத்துறை அபிவிருத்தி, கல்வி, இயற்கை சக்தி வளங்கள் உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டது.

வடக்கு மாகாணத்தில் சுற்றுலாத்துறையை மேம்படுத்த பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. எனினும், சுற்றுலா வழிகாட்டிகள் போதிய எண்ணிக்கையில் இல்லை எனவும், தங்குமிட வசதிகள் போதுமான அளவு இல்லை எனவும் குறிப்பிட்ட கௌரவ ஆளுநர், சுற்றுலாத் துறையை மேம்படுத்த முதலீடுகள் தேவைப்படுவதாகவும் தெரிவித்தார்.

கற்றல் செயற்பாடுகள் மற்றும் தொழிற்கல்வியை பெற முடியாது போகும் இளைஞர்,யுவதிகள் தொடர்பில் மாற்று வழிகள் முன்னெடுக்கப்பட வேண்டும் எனவும் கௌரவ ஆளுநர் தெரிவித்தார்.

விடயங்களை கேட்டறிந்துக் கொண்ட இலங்கைக்கான நோர்வே தூதுவர் May-Elin Stener, வடக்கு மாகாண அபிவிருத்திக்கு தேவையான ஒத்துழைப்புகளை தொடர்ச்சியாக வழங்கத் தயார் எனவும், ஒருங்கிணைந்த வேலைத்திட்டங்களை முன்னெடுக்க ஒத்துழைப்பு வழங்குவதாகவும் தெரிவித்தார்.