LOADING

Type to search

இலங்கை அரசியல்

உறவுகளை நினைவேந்தும் உரிமையை மறுத்து தமிழர்களைச் சீண்ட வேண்டாம்! ரணில் அரசுக்கு செல்வம் அடைக்கலநாதன் எச்சரிக்கை

Share

(14-05-2024)

”தமிழர்கள் மறைந்த தமது உறவுகளை நினைவேந்தும் நிகழ்வையும் கூட, இனங்களுக்கிடையில் குரோதத்தை ஏற்படுத்துவதற்கு எதிரான சட்டத்தின் மூலம் தடுப்பதற்குக் களம் இறங்கியமை மூலம் தேசிய நல்லிணக்கத்துக்கான கடைசி வாய்ப்பையும் இறுக மூடி இருக்கின்றது.

இலங்கை ஆட்சிப் பீடம் இது பெரும் துரதிஷ்ட வசமானதாகும் என வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை ஒட்டி முள்ளிவாய்க்கால் கஞ்சி விநியோகித்தவர்கள் சம்பூரில் ஈவு இரக்கமற்ற முறையில் நள்ளிரவில் பொலிஸாரால் அராஜகமான முறையில் கைது செய்யப்பட்ட விடயம் தொடர்பில் ஊடகங்களிடம் கருத்து வெளியிட்ட போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

“மக்களின் நினைவேந்தல் உரிமை மறுக்கப்பட முடியாத அடிப்படை உரிமையாகும். சர்வதேசத் தரப்புக்கள் ஐ.நா. மனித உரிமைகள் அவையிலேயே திரும்பத் திரும்ப இதனை வலியுறுத்தி வருகின்றன.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கூட, தாம் ஜனாதிபதியாக பதவியேற்ற கையோடு, ‘மக்கள் தமது உறவுகளை நினைவு கூற உரிமை உண்டு. அது மறுக்கப்பட முடியாத’ என்று கூறினார். இதன் பின்னரும் அதை அவர் பல தடவைகள் வலியுறுத்தி வந்தார்.

இருப்பினும், அவையெல்லாம் பேச்சளவில் தான் இருக்கின்றன. அவரின் பொலிஸ் கட்டமைப்பு அதற்கு எதிராக மிக முரட்டுத் தனமாக தமிழ் மக்களின் ஆன்மாவையே சீண்டிப் பார்க்கும் விதமாக அடக்குமுறை திமிருடன் இப்படி நடந்து கொள்கின்றது.

இன்னொரு கோட்டாபய ராஜபக்சவின் அராஜக ஆட்சியையே இந்தச் செயற்பாடு மூலம் ரணில் விக்ரமசிங்கவும் இங்கு நிலைநிறுத்த முயலுகின்றாரோ என்ற சந்தேகம் நமக்கு எழுகின்றது.இந்த போக்கு அவருக்கும் நல்லதல்ல, இலங்கை நாட்டுக்கும் நல்லதல்ல. ‘வினையை விதைத்தால் அதைத்தான் அறுவடை செய்ய வேண்டி இருக்கும்’ என்பதை ஜனாதிபதிக்கும் அவரது பொலிஸ் துறைக்கும் நினைவுபடுத்த விரும்புகின்றோம்.

நினைவேந்தல் விடயத்தில் மக்களின் உரிமையை அராஜகம் மூலம் அடக்குவது மக்களை அதற்கு எதிராகக் கிளர்ந்தெழ வைக்கும் விபரீதத்தையே ஏற்படுத்தும். இதையும் ஆட்சிப் பீடத்துக்கு நாங்கள் நினைவூட்ட விரும்புகின்றோம் என்றும் தெரிவித்துள்ளார்.