விளையாட்டு அரங்க தீ விபத்தில் 12 குழந்தைகள் பலி: ‘குஜராத் அரசு தூங்குகிறதா?’ ஐகோர்ட்டு காட்டமான கேள்வி
Share
ராஜ்கோட் விளையாட்டு அரங்கத்தில் தீ விபத்து நடைபெறும் வரை 4 ஆண்டாக என்ன செய்து கொண்டிருந்தீர்கள்-? கண்ணை மூடித் தூங்கினீர்களா? என்று குஜராத் அரசை நோக்கி, அம்மாநில ஐகோர்ட்டு கட்டமாக கேள்வி எழுப்பியுள்ளது.
குஜராத்தின் ராஜ்கோட் நகரில் சுமார் 2 ஏக்கர் பரப்பளவில் ‘டிஆர்பி கேம்’ என்ற பெயரில் சிறார், பெரியவர்களுக்கான விளையாட்டு மையம் செயல்பட்டது.
அங்கு கடந்த சனியன்று ஏற்பட்ட தீ விபத்தில் 32 பேர் உயிரிழந்தனர். இதில் 12 பேர் சிறுவர், சிறுமியர் ஆவர்.30 பேர் காயமடைந்து, அங்குள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர்.
தானாக முன்வந்து வழக்கு
இந்த சம்பவம் தொடர்பாக குஜராத் உயர்நீதிமன்றம் தானாக முன்வந்து வழக்குப்பதிவு செய்து அகமதாபாத், வதோதரா, சூரத், ராஜ்கோட் மாநகராட்சிகளின் வழக்கறிஞர்கள் ஆஜராகும்படி உத்தரவிட்டது.
நேற்றைய வழக்கு விசாரணையின் போது நகராட்சி நிர்வாகத்திற்கு குஜராத் உயர்நீதிமன்ற நீதிபதிகள் பிரேன் வைஷ்ணவ், தேவன் எம்-தேசாய் ஆகியோர் கண்டனம் தெரிவித்ததுடன் காட்டமான கேள்விகளை எழுப்பினர்.
கண்பார்வை போய்விட்டதா?
அவர்கள்,”ராஜ்கோட் விளையாட்டு அரங்கத்தில் தீ விபத்து நடைபெறும் வரை 4 ஆண்டாக என்ன செய்து கொண்டிருந்தீர்கள்?. முறையான பராமரிப்பு இல்லாத விளையாட்டு அரங்கத்தை செயல்பட அனுமதித்தது ஏன்? மனிதத்தவறால் ஏற்பட்ட விபத்தில் அப்பாவி குழந்தைகள் பலியாகி விட்டனர். ராஜ்கோட் நீதிமன்றத்திற்கு கண்பார்வை போய்விட்டதா? நீண்ட உறக்கத்தில் ஆழ்ந்துவிட்டதா? விளையாட்டு மைதானம் இரண்டரை ஆண்டுகளாக முறையான அனுமதியின்றி இயங்கி வருவதில் மாநில அரசு கண்ணை மூடிக் கொண்டு இருக்கிறது என்றே நாங்கள் கருதுகிறோம். மாநில அரசு மற்றும் உள்ளாட்சி மன்றங்கள் மீதான நம்பிக்கையை இழந்துவிட்டோம்.”
இவ்வாறு தெரிவித்த நீதிபதிகள் வழக்கை ஒத்திவைத்தனர்.