LOADING

Type to search

இந்திய அரசியல்

கருத்துக்கணிப்புகளை முறியடித்த மக்கள் தீர்ப்பு: ‘பாஜக தனி மெஜாரிட்டி பெறமுடியவில்லை’ கூட்டணி கட்சிகள் தயவுடன் மட்டுமே ஆட்சி அமைக்க வாய்ப்பு

Share

400+ இலக்கு என்ற அறைகூவலுடன் தேர்தலை எதிர்கொண்ட பாஜக தலைமையிலான என்டிஏ கூட்டணி 290+ இடங்களை மட்டுமே வசப்படுத்துகிறது. பாஜக தனிப்பெரும்பான்மை பெறாததால் தனது கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடனேயே ஆட்சி அமைக்கும் நிலையே மோடிக்கு மக்கள் அளித்த தீர்ப்பு என்ற வாதம் முன்வைக்கப்படுகிறது.

நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடந்த மக்களவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று (ஜூன் 4) காலை 7 மணிக்கு தொடங்கியது.

மொத்தமுள்ள 543 தொகுதிகளில் ஏற்கெனவே சூரத் தொகுதியில் பாஜக வேட்பாளர் முகேஷ் தலால் வெற்றி பெற்ற நிலையில் எஞ்சிய 542 தொகுதிகளில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது.

பாஜக மட்டும் 239

இரவு 7 மணி நிலவரப்படி பாஜக தனித்து 239 வசப்படுத்துகிறது. கூட்டணிக் கட்சிகளுடன் சேர்த்து பாஜக கூட்டணி 290+ இடங்களில் வெற்றி முகம் கண்டுள்ளது. ஆட்சியமைக்க 272 இடங்களில் வெற்றி பெற்றால் போதும் என்ற நிலையில் பாஜக கூட்டணியாக மட்டும் பெரும்பான்மை பலத்தைப் பெற்றுள்ளது.

இது ஒருபுறம் இருக்க இந்தியா கூட்டணியில் காங்கிரஸ் 100+ இடங்களை தனித்து வசப்படுத்துகிறது. கூட்டணிக் கட்சிகளுடன் சேர்த்து 235 தொகுதிகளை எட்டுகிறது.

இந்தச் சூழலில் ஆட்சி அமைப்பது பற்றி பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி முக்கிய ஆலோசனை நடத்துகிறது. இதில் தெலுங்கு தேசம் கட்சி, ஐக்கிய ஜனதா தளம் கட்சி கலந்து கொள்கின்றன.

மக்களவைத் தேர்தலில் இந்தக் கட்சியின் என்டிஏவில் அங்கம் வகித்தன. இந்த இரு கட்சிகளின் தலைவர்களான சந்திரபாபு நாயுடுவும், நிதிஷ் குமாரும் இப்போது கிங் மேக்கர்களாக கவனம் ஈர்த்துள்ளனர்.

இந்நிலையில், “பாஜக கூட்டணிக்கு வெற்றி அளித்த வாக்காளர்களுக்கு நன்றி. தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சிகளின் மீதான நம்பிக்கைக்கு நன்றி” என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

இந்தியா கூட்டணி என்ன செய்யப் போகிறது?

235 தொகுதிகளை வசப்படுத்தி வலம் வரும் இந்தியா கூட்டணி இந்த இரு கட்சிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதாக ஊகங்கள் வெளியான நிலையில், டெல்லியில்செவ்வாய்க்கிழமை மாலை காங்கிரஸ் தேசியத் தலைவர் கார்கே, முக்கியத் தலைவர் ராகுல் காந்தி, சோனியா, பிரியங்கா காந்தி ஆகியோர் செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டனர்.

அப்போது பேசிய ராகுல் காந்தி, “இந்தியா கூட்டணிக் கட்சிகள் நாளை (ஜூன் 5) கூடும். அப்போது, நாங்கள் எதிர்க்கட்சி வரிசையில் அமர விரும்புகிறோமா? அல்லது வேறு முயற்சியை விரும்புகிறோமா என்பதை கூட்டணிக் கட்சியினருடன் பேசி, அவர்களின் கருத்துகளுக்கு மதிப்பு அளித்து முடிவு செய்வோம்” என்று கூறினார்.

முன்னதாக பேசிய கார்கே, “இந்த முடிவுகள் மோடிக்கு எதிரானது என்பது தெளிவாக தெரிகிறது. இது மோடியின் அரசியல் தோல்வி. இந்த தேர்தலில் பாஜக ஒற்றை முகத்தை காண்பித்து வெற்றிபெற நினைத்தது. அது மோடியின் முகம்.” என்று கூறினார்.