ஒடிசாவில் ஆட்சியைக் கைப்பற்றிய பாஜக – முதலமைச்சர் பதவி?
Share
ஒடிசா சட்டப் பேரவைத் தோ்தலில் பாஜக வெற்றி பெற்று, ஆட்சியைக் கைப்பற்றியுள்ள நிலையில், மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் புவனேஷ்வரில் இருந்து டில்லி புறப்பட்டார்.
ஒடிசாவில் மக்களவைத் தோ்தலுடன் சட்டப் பேரவைக்கும் 4 கட்டங்களாக தோ்தல் நடைபெற்றது. இங்கு 21 மக்களவைத் தொகுதிகளும், 147 சட்டப் பேரவைத் தொகுதிகளும் உள்ளன. அங்கு பிஜு ஜனதா தளம், பாஜக, காங்கிரஸ் என மும்முனைப் போட்டி நிலவிய நிலையில், பாஜக 78 சட்டப் பேரவைத் தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது. பிஜு ஜனதா தளம் 51 தொகுதிகளிலும், காங்கிரஸ் 14 இடங்களிலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஓரிடத்திலும், சுயேட்சைகள் 3 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளனர். அதேபோல், ஒடிசாவில் மொத்தமுள்ள 21 மக்களவைத் தொகுதிகளில் பாஜக 19 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. சம்பல்பூர் மக்களவைத் தொகுதியில் பிஜு ஜனதா தளத்தின் பிரணாப் பிரகாஷ் தாஸை எதிர்த்து போட்டியிட்ட, மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் 1 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இந்த நிலையில், முதலமைச்சர் பதவிக்கான முன்னணி வேட்பாளராக எதிர்பார்க்கப்படும் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் புவனேஷ்வரில் இருந்து டில்லி புறப்பட்டார்.