LOADING

Type to search

இந்திய அரசியல்

மாணவ மாணவிகளுக்கு எதிரான ‘நீட்’ தேர்வை நிறுத்த வேண்டுமென இந்திய அரசை வலியுறுத்தி வருகிறார் மு.க.ஸ்டாலின்

Share

இளநிலை மருத்துவ படிப்புகளுக்காக நடத்தப்படும் நீட் தேர்வு ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. நடப்பாண்டுக்கான நீட் தேர்வு கடந்த மே 5 ஆம் தேதி நடைபெற்றது. இதன் முடிவுகள் ஜூன் 4 ஆம் தேதி வெளியாகியது. 23 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதிய நீட் தேர்வில் வினாத்தாள் மோசடி, ஆள்மாறாட்ட விவகாரம் என பிரச்சினையில் சிக்கியது. அதேசமயம் நீட் தேர்வு முடிவில் வழக்கத்தில் இல்லாத வகையில் அதிக மாணவர்கள் முழு மதிப்பெண் பெற்றது சர்ச்சையை கிளப்பியது. இதனிடையே குஜராத் மாநிலம் கோத்ராவில் உள்ள ஒரு மையத்தில் நீட் தேர்வில் முறைகேடு செய்ததாகக் கூறி பயிற்சி மையத்தின் தலைவர் உட்பட 5 பேரை குஜராத் போலீஸார் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை உண்டாக்கியுள்ளது. இந்த செய்தியை சுட்டிக்காட்டியுள்ள முதலமைச்சர் ஸ்டாலின் எக்ஸ் வலைத்தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில்,

‘ நீட் தேர்வை சுற்றி நடந்து வரும் சர்ச்சைகள் அதன் அடிப்படையில் சமத்துவமின்மை தன்மையை எடுத்துக்காட்டுகின்றது. பல்லாயிரம் ஆண்டுகளாக கல்வி மறுக்கப்பட்டு வரும் சமுதாயத்தில், ஒடுக்கப்பட்டோர் முன்னேற்றத்திற்கு அதிக வாய்ப்புகளை வழங்க வேண்டும். மாறாக, அத்தகைய மாணவர்களின் வாய்ப்பை நீட் தடுக்கிறது. தேசிய தேர்வு முகமைக்கு (NTA) மத்திய கல்வி அமைச்சர் பாதுகாத்தாலும் சமீபத்திய நிகழ்வுகள் வித்தியாசமான தோற்றத்தை உண்டாக்குகிறது. பல கோடி ரூபாய் மதிப்பிலான காசோலைகள் மற்றும் எட்டு வெற்று காசோலைகள் போன்ற பண பலன்களுக்காக ஓஎம்ஆர் தாள்களை கண்காணிப்பாளர்கள் சேதப்படுத்தியதாக குஜராத் காவல்துறை எஃப்ஐஆர் பதிவு செய்துள்ளது. ஒரு பள்ளி முதல்வர், ஒரு இயற்பியல் ஆசிரியர் மற்றும் பல நீட் பயிற்சி மையங்கள் சம்பந்தப்பட்ட இந்த சதி, முறையான மாற்றத்திற்கான அவசரத் தேவையை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. அனிதா முதல் எண்ணற்ற மாணவர்கள் வரை பரிதாபகரமாகத் தங்கள் உயிரை மாய்த்துக் கொண்டதை நாம் நேரில் பார்த்திருக்கிறோம். தகுதியின் அளவுகோலாகக் கருதப்படும் நீட் தேர்வு, சமூகத்தின் அனைத்து மட்டங்களையும் பாதிக்கும் ஒரு பரவலான மோசடியாகத் தன்னை மீண்டும் மீண்டும் வெளிப்படுத்தி வருகிறது. இந்த மாணவர் விரோத, சமூக நீதிக்கு எதிரான, ஏழைகளுக்கு எதிரான நீட் தேர்வை மத்திய அரசு நிறுத்த வேண்டும்’ என தெரிவித்துள்ளார்.