LOADING

Type to search

இந்திய அரசியல்

மாம்பழம் சின்னத்தை ஒதுக்கக் கோரி இந்திய தலைமை தேர்தல் ஆணையத்திற்கு பாமக கடிதம்

Share

விக்கிரவாண்டி சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலில், மாம்பழம் சின்னத்தை ஒதுக்கக் கோரி இந்திய தலைமை தேர்தல் ஆணையத்திற்கு பாமக கடிதம் எழுதியுள்ளது. 

     திமுக எம்எல்ஏவாக இருந்த புகழேந்தி கடந்த ஏப்ரல் மாதம் 6ம் தேதி உயிரிழந்தார். இதையடுத்து விக்கிரவாண்டி தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது.  இந்த தொகுதிக்கு ஜூலை 10ஆம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 14ம் தேதி தொடங்கியது. வேட்புமனுதாக்கலுக்கான கடைசி தேதி ஜூன் 21 ஆகும். வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை ஜூன் 24-இல் நடைபெறும்.  மனுக்களைத் திரும்பப் பெற ஜூன் 26 பிற்பகல் 3 மணி வரை கால அவகாசம் உள்ளதால், அதன் பிறகு வேட்பாளர் இறுதிப் பட்டியல் வெளியிடப்படும்.  இதனைத் தொடர்ந்து, ஜூலை 10-ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும். ஜூலை 13- ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடத்தப்பட்டு, தேர்தல் முடிவு அறிவிக்கப்படும். விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுக சார்பில் விவசாயத் தொழிலாளர் அணிச் செயலாளர் அன்னியூர் சிவா வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். இதே போல நாம் தமிழர் கட்சி சார்பில் மருத்துவர் அபிநயா போட்டியிடுவார் என அக்கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்தார்.

தேசிய ஜனநாயக கூட்டணியின் சார்பில் பாமக போட்டியிடும் என பாஜக  மாநில தலைவர் அண்ணாமலை அறிவித்திருந்தார். இதனையடுத்து பாமக சார்பில் சி.அன்புமணி  போட்டியிடுவார் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிவித்தார். விக்கிரவாண்டி இடைத்தேர்தலை புறக்கணிப்பதாக அதிமுக அறிவித்தது. நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் பாமக 10 தொகுதிகளில் போட்டியிட்டது. இதில் 4.23 வாக்குகளை மட்டுமே பெற்ற நிலையில் பாமக மாநில கட்சி அந்தஸ்தை இழந்தது. இந்தநிலையில், விக்கிரவாண்டி சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலில், மாம்பழம் சின்னத்தை ஒதுக்கக் கோரி இந்திய தலைமை தேர்தல் ஆணையத்திற்கு பாமக கடிதம் எழுதியுள்ளது.