LOADING

Type to search

இந்திய அரசியல்

ஆம்ஸ்ட்ராங் குடும்பத்தினருக்கு கொலை மிரட்டல் – பள்ளி தாளாளர் கைது

Share

படுகொலை செய்யப்பட்ட பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங்கின் குடும்பத்திற்கு கடிதம் மூலம் கொலை மிரட்டல் விடுத்த பள்ளி தாளாளரை காவல்துறை கைது செய்தனர்.

      பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங், கடந்த மாதம் 5-ம் தேதி சென்னை, பெரம்பூரில் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கு தொடர்பாக, கடந்தாண்டு கொலை செய்யப்பட்ட ஆற்காடு சுரேஷின் சகோதரர் பொன்னை பாலு, குன்றத்தூரைச் சேர்ந்த ரவுடி திருவேங்கடம், பூந்தமல்லியைச் சேர்ந்த வழக்கறிஞர் அருள், அஞ்சலை, ஹரிஹரன், சதீஷ் உள்பட 22 பேர் கைது செய்யப்பட்டனர். இதற்கிடையே இந்த வழக்கில் தொடர்புடைய முக்கிய குற்றவாளியான பிரபல ரவுடி திருவேங்கடம் ஜூலை 14-ம் தேதி என்கவுண்டர் செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த கொலை சம்பவம் தொடர்பான விசாரணை நடைபெற்று வரும் நிலையில், கடந்த 4ம் தேதி ஆம்ஸ்ட்ராங் குடும்பத்திற்கு கடிதம் மூலம் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டது. இதனையடுத்து, ஆம்ஸ்ட்ராங் மனைவி, உறவினர்கள் வசிக்கும் அயனாவரம் அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் காவல்துறை பாதுகாப்பு போடப்பட்டது. இந்த நிலையில், ஆம்ஸ்ட்ராங் குடும்பத்திற்கு கொலை மிரட்டல் விடுத்த கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த தனியார் பள்ளி தாளாளர் அருண்ராஜ் என்பவரை காவல்துறை கைது செய்தனர். மேலும் அவரிடம் இது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.