LOADING

Type to search

இலங்கை அரசியல்

ராஜபக்சக்களின் நூறு திருடர்கள் ரணிலின் பக்கம்; – யாழ்ப்பாணத்தில் ஜேவிபி விமல் ரத்நாயக்க தெரிவிப்பு

Share

பு.கஜிந்தன்

ராஜபக்சக்களின் நூறு திருடர்கள் ரணில் பக்கம் ; அனைத்து சலுகைகளும் நிறுத்தப்படும் – யாழில் ஜேவிபி விமல் ரத்நாயக்க

ராஜபக்சக்களுடன் இருந்த நூற்றுக்கு மேற்பட்ட பாராளுமன்ற திருடர்கள் ரணில் பக்கம் சென்றுள்ள நிலையில் எமது தோழர் அனுர குமார ஜனாதிபதியாக வந்ததும் அவர்களின் அனைத்து சலுகைகளும் நிறுத்தப்படும் என தேசிய மக்கள் சக்தியின் நிறைவேற்றுக் குழு உறுப்பினரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான விமல் ரத்நாயக்க தெரிவித்தார்.

நேற்று ஞாயிற்றுக்கிழமை யாழ். பலாலி வீதி திருநெல்வேலி சந்திப் பகுதியில் தேசிய மக்கள் சக்தியின் பிரச்சார அலுவலகத்தை திறந்து வைத்து உரையாற்றும் போது அவர் இவ்வாறு தெரிவித்தார் .

அவர் மேலும் தெரிவிக்கையில், தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் விஞ்ஞாபனம் இன்று திங்கட்கிழமை வெளியிடப்பட உள்ளது.

எமது தேர்தல் விஞ்ஞானத்தில் நாட்டில் புரையோடி உள்ள இலஞ்சம் ஊழல்களை ஒழிப்பது இலஞ்ச ஊழல்களில் ஈடுபட்டவர்கள்களை தண்டிப்பதற்கு தேவையான சட்டத்திருத்தக்கள் தொடர்பில் தெளிவான ஏற்பாடுகள் குறிப்பிடப்பட்டுள்ளது.

ராஜபக்சக்களுடன் இருந்த நூற்றுக்கு மேற்பட்ட நாட்டை திருடிய பாராளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதியை ரணில் விக்கிரமசிங்க பக்கம் நிக்கிறார்கள்.

செப்டம்பர் 21 ஆம் அதிகாரி அனுரகுமார ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டதும் இலஞ்சம் ஊழல் குற்றச்சாட்டுகளில் உள்ள பாராளுமன்ற உறுப்பினர்களின் பாராளுமன்ற ஓய்வூதியம் நிறுத்தப்படும்.

மேலும் எமது தேர்தல் விஞ்ஞாபனத்தில் இலஞ்சம் ஊழலில் ஈடுபட்ட பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான கொடுப்பனவுகள் வாகன சலுகைகள் நிறுத்தப்படுவதோடு நாம் ஆட்சிக்கு வந்ததும் பாராளுமன்ற உறுப்பினர்களின் சிறப்பு சலுகைகள் அனைத்தும் நிறுத்தப்படும் என்பதை உறுதியாக கூறிக் கொள்கிறேன்.

நாட்டை திருடியவர்கள் மீண்டும் நாட்டை பாதாளத்துக்கு இட்டுச் செல்வதற்காக பல்வேறு உத்திகளை கையாண்டு ஜனாதிபதி தேர்தலில் பொய் பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகின்றனர்.

ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் பிரச்சாரங்கள் சூடு பிடித்துள்ள நிலையில் நாட்டை திருடியவர்கள் எந்த பக்கம் செல்வது என மாறி மாறி ஓடித் திரிகிறார்கள்.

இவர்களின் ஓட்டம் மக்களுக்கான ஓட்டம் அல்ல தமது அரசியல் எதிர்காலத்தையும் தமது சுகபோக வாழ்க்கையையும் தொடர்ந்து தக்க வைத்துக் கொள்வதற்காக டீல் அரசியலில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

76 வருட காலமாக இந்த நாட்டு மக்கள் அனுபவித்த இன்னல்களுக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்காக தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் தோழர் அனுரகுமாரவுடன் மக்கள் ஒன்றிணைய ஆரம்பித்து விட்டார்கள்.

எமது “டீல்” அரசியல்வாதிகளுடன் கிடையாது மக்களுடன் தான் நாட்டை முன்னோக்கிக் கொண்டு செல்வதற்காகும் மக்கள் எதிர்பார்த்த மாற்றத்தை கொண்டுவரக்கூடிய வேட்பாளர் அனுரகுமாரவின் வெற்றியை உறுதியாக்க மக்களுடன் டீல் போடுகிறோம்.

நாட்டைக் கடன் சுமையில் சிக்க வைத்து விட்டு நாட்டை அபிவிருத்தி பாதையில் முன்னோக்கிக் கொண்டு செல்வதாக கருத்து வெளியிடும் ரணில் விக்கிரமசிங்கவினால் நாட்டை அபிவிருத்தி பாதையில் கொண்டு செல்ல முடியாது.

ஆகவே இலஞ்ச ஊழலற்ற எதிர்கால நாட்டை கட்டி எழுப்பும் சாதாரண மக்களின் ஒருவரான தோழர் அனுரகுமாரவின் வெற்றி இந்த நாட்டின் வெற்றியாகும் என்பதோடு அவரின் வெற்றிக்கு தமிழ் மக்கள் தமது பங்களிப்பை வழங்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.