அச்சுறுத்தல் காரணமாக நீதிபதி சரவணராஜா பதவி விலகிய சம்பவம் குறித்து விசாரிக்க ரணில் உத்தரவு
Share
நடராசா லோகதயாளன்
முல்லைத்தீவு நீதவான் நீதிமன்ற நீதிபதி டி.சரவணராஜா பதவி விலகியமை தொடர்பில் முழுமையான விசாரணைகளை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவுக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளார்.
இந்த சம்பவத்திற்கான மூல காரணத்தை உடனடியாக ஆய்வு செய்யுமாறு தனது செயலாளருக்கு ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார்.
ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க, நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ மற்றும் பொது பாதுகாப்பு அமைச்சர் திரன் அலஸ் ஆகியோருடன் சம்பவம் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.
இதற்கு முன்னர் உயிர் அச்சுறுத்தல்கள் தொடர்பில் நீதவான் முறைப்பாடு செய்யவில்லை என தெரியவந்துள்ளது.
கடந்த 24ஆம் திகதி வெளிநாடு சென்ற நீதவான், தனது இராஜினாமா கடிதத்தை செப்டெம்பர் 23 ஆம் திகதி நீதிச்சேவை ஆணைக்குழுவிற்கு அனுப்பி வைத்துள்ளார்.
சட்டமா அதிபருக்கு எதிராக நீதவான் முன்வைத்துள்ள குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் ஜனாதிபதியின் செயலாளர் சட்டமா அதிபரிடம் வினவியதோடு, நீதிச்சேவை ஆணைக்குழுவின் ஊடாக முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய நீதவானுடன் தனது உத்தியோகபூர்வ அலுவலகத்தில் கலந்துரையாடியதாக சட்டமா அதிபர் தெரிவித்துள்ளார்.
குறுந்தூர்மலை தொடர்பில் அவர் அளித்த தீர்ப்பிற்காக, சரத் வீரசேகர போன்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் அவர் மீது இனவாத கருத்துக்களயும், அச்சுறுத்தல் விடுக்கும் வகையிலும் பேசினர்.
“இது சிங்கள பௌத்த நாடு, அதை முல்லைத்தீவு தமிழ் நீதிபதி மனதில் கொள்ளவேண்டும்” என்று தனது நாடாளுமன்ற சிறப்புரிமையை பயன்படுத்தி சரத் வீரசேகர பேசியது பதிவாகியுள்ளது.




















