LOADING

Type to search

இந்திய அரசியல்

அமெரிக்காவிலிருந்து குஜராத் நோக்கி வந்த கப்பல் மீது ஈரான் தாக்குதல் – இந்தியா கடும் கண்டனம்

Share

ஈரான் மீது அமெரிக்கா-இஸ்ரேல் இணைந்து தொடுத்துள்ள போர் தீவிரமடைந்து வருகிறது. இதனால் உலகளவில் கச்சா எண்ணெய் விலை உயர்வு, எரிவாயு தட்டுப்பாடு சூழல் ஏற்பட்டுள்ளது. உலக நாடுகளுக்கு கச்சா எண்ணெய் போக்குவரத்துக்கு முக்கிய வழித்தடமாக விளங்கும் ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து ஒரு லிட்டர் எண்ணெய் கூட வெளியேறாது என ஈரான் எச்சரிக்கை விடுத்து இருந்தது. இந்நிலையில், அமெரிக்க நாட்டிலிருந்து ஹார்முஸ் ஜலசந்தி வழியாக குஜராத் துறைமுகம் நோக்கி வந்துகொண்டிருந்த தாய்லாந்து நாட்டின் மயூரி நரேயி சரக்குக் கப்பல் மீது ஈரான் தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மார்ச் 11 அன்று, ஓமன் கடற்கரைக்கு அருகிலுள்ள ஹார்முஸ் ஜலசந்தியில் பயணித்துக் கொண்டிருந்தபோது, அடையாளம் தெரியாத இரண்டு ஏவுகணைகள் கப்பலைத் தாக்கியதாக தகவல் வெளியானது. இதனால் கப்பலின் எஞ்சின் அறையில் தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் அந்தக் கப்பலில் இருந்த 20 மாலுமிகள் மீட்கப்பட்ட நிலையில், என்ஜின் அறையில் சிக்கிய 3 பேர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது ஈரானின் இந்த தாக்குதலுக்கு இந்திய வெளியுறவு அமைச்சகம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது குறித்து இந்திய வெளிவிவகார அமைச்சகம் வெளியிட்டுள்ள கண்டன செய்தியில், “மேற்கு ஆசிய மோதலின் போது வர்த்தக கப்பல்களை குறிவைத்து தாக்குவது மிகவும் கண்டிக்கத்தக்கது இதுபோன்ற தாக்குதல்கள் பொதுமக்கள் உயிருக்கும் கடல்சார் வர்த்தகத்திற்கும் ஆபத்தை ஏற்படுத்துகின்றன. உயிர்களுக்கு ஆபத்து விளைவிக்கும் செயல்கள் தவிர்க்கப்பட வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.