LOADING

Type to search

உலக அரசியல்

அமெரிக்கா தாக்குதல்களை நடத்த ஈராக்கை தளம்போல் பயன்படுத்த கூடாது: பிரதமர் அல்-சூடானி

Share

மேற்காசிய மோதல்களுக்கு மத்தியில் ஈராக் பிரதமர் அல்-சூடானி, அமெரிக்காவின் வெளியுறவு துறை அமைச்சர் மார்கோ ரூபியோவை தொலைபேசி வழியே தொடர்பு கொண்டு இன்று பேசினார். மேற்காசியாவில் பிராந்திய அளவிலான பாதுகாப்பு நிலைமை மோசமடைந்த சூழலில் இந்த உரையாடல் நடந்துள்ளது. இந்த மோதல் தொடர்ச்சியாக, ஈராக்கின் வான்பகுதியில் ஏவுகணைகளும், போர் விமானங்களும் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வந்து கொண்டிருக்கின்றன என தகவல் வெளியாகி உள்ளது. இந்நிலையில், ரூபியோவுடனான உரையாடலின்போது, ஈராக்கின் வான்வெளி, நிலப்பரப்பு மற்றும் கடல் பகுதிகள் போன்றவை பிற அண்டை நாடுகளை இலக்காக கொண்டு ராணுவ தாக்குதல் நடத்த பயன்படுத்தப்பட கூடாது. இதேபோன்று ஈராக்கிலும் வன்முறை பரவாமல் பாதுகாக்கப்பட வேண்டும். இதனை உறுதி செய்வது முக்கியம் என அவர் ரூபியோவிடம் வலியுறுத்தினார். அந்நிய ராணுவ அமைப்புகளால் அங்கீகாரமின்றி தன்னுடைய இறையாண்மை கொண்ட எல்லை பகுதிகள் பயன்படுத்தப்படுவதற்கு எதிராக தன்னுடைய நாடு உறுதியாக உள்ளது என அப்போது அவர் வலியுறுத்தினார். நடந்து வரும் மோதல்களில் ஈராக்கை உள்ளிழுக்கும் எந்த முயற்சியையும் ஏற்க முடியாது என கூறியதுடன், ஈராக்கின் வான்வெளியில் அத்துமீறி நடந்து கொள்வதற்கு தன்னுடைய கண்டனங்களையும் தெரிவித்து கொண்டார். எனினும், நடுநிலைமையை பராமரிக்க ஈராக் முயற்சிக்கும் சூழலில், அதன் மீது ஈரான் முன்பே தாக்குதலை தொடங்கி விட்டது. வடக்கு ஈராக்கிலுள்ள அமெரிக்க படை தளத்தின் மீது ஈரானின் ஏவுகணை தாக்கியது. இந்த தாக்குதலை நாங்கள் நடத்தினோம் என ஈரான் ராணுவம் பொறுப்பும் ஏற்று கொண்டது. இந்நிலையில், ஈராக்கின் எர்பில் நகரிலுள்ள ஹரீர் விமான படை தளத்தில் அமைந்துள்ள அமெரிக்க ராணுவ தலைமையகம் மீது ஈரானின் புரட்சி காவல் படை எனப்படும் ஈரான் ராணுவம், 5 ஏவுகணைகளை அந்த ராணுவ தளத்தின் மீது வீசி தாக்குதல் நடத்தி உள்ளது. இதனால், மேற்காசிய பகுதிகளில் ஏற்பட்டு உள்ள பதற்ற நிலை அதிகரித்து காணப்படுகிறது.