அவசரமாக மட்டக்களப்பு தாந்தாமலையில் போடப்பட்ட தொல்பொருள் திணைக்கள அறிவித்தல் பலகை!
Share
மட்டக்களப்பு – படுவான்கரை பகுதியில் இரண்டு இடங்களில் தொல்லியல் இடம் என மும்மொழிகளில் எழுதப்பட்ட புதிய பெயர்ப்பலகைகள் நாட்டப்பட்டுள்ளமை சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியனேத்திரன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
மட்டக்களப்பு – படுவான்கரைப் பெருநிலம், மண்முனை தென்மேற்கு பிரதேச பிரிவில் உள்ள தாந்தாமலை முருகன் ஆலயத்தில் செல்லும் வீதிகளில் இரு இடங்களில் இன்று (20/11/2025) பி.ப:1.30 மணிக்கு தொல்பொருள் திணைக்களத்தால் அறிவித்தல் பலகை இடப்பட்டுள்ளன.
அதில் தாந்தாமலை தொல்லியல் இடம் என மூன்று மொழிகளாலும் எழுதப்பட்ட அறிவித்தல் பலகை தாந்தாமலை செல்லும் நாப்பது வட்டை சந்தியில் தாந்தாமலை முருகன் ஆலயத்தை அம்புக்குறி காட்டி போடப்பட்டதுடன் மற்றய அறிவித்தல் பலகை தாந்தாமலை முருகன் ஆலத்துக்கு அண்மையில் உள்ள பொலிஷ் சாவடி நிலைய சந்தியில் தாந்தாமலை முருகன் ஆலயத்தை அம்புக்குறியிட்டு காட்டப்பட்டுள்ளது.
திருகோணமலையில் அத்துமீறி கடந்த 2025, நவம்பர்,16, ல் புத்தர் சிலைவைக்கப்பட்டு சரியாக மூன்று தினங்களால் மட்டக்களப்பு மாவட்டத்தில் படுவான்கரைப் பெருநிலத்தில் இந்த விளம்பரப்பலகையிடப்பட்டு தாந்தாமலை தமிழரர்களின் பூர்வீக நிலத்தில் தொல்பொருள் ஆய்வு என்ற போர்வையில் பௌத்த விகாரைகளை நிறுவும் திட்டமாக இந்த விளம்பர அறிவிப்பு இடப்பட்டிருக்கலாம் எனவும் சந்தேகம் எழுந்துள்ளது என அவர் மேலும் தெரிவித்தார்.




















