ஆஸ்கார் போட்டியில் காந்தாரா சாப்டர் 1.. சிறந்த திரைப்பட பிரிவில் போட்டி
Share
2022-ல் வெளியாகி நாட்டையே திரும்பிப் பார்க்க வைத்த கன்னட படம் ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்த ‘காந்தாரா’. இதன் முன்கதையாக கடந்த ஆண்டு அக்டோபரில் வெளியான ‘காந்தாரா சாப்டர் 1’ அதே அளவு கதை இல்லையென்றாலும் பிரமாண்டத்தில் குறை வைக்கவில்லை. ஹாலிவுட் தரத்திலான விஎப்எக்ஸ் காட்சிகள் பிரமிக்க வைத்தன. இந்தப் படம், உலக அளவில் சுமார் 855 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்து சாதனை படைத்தது. இந்நிலையில் இந்த ஆண்டு மார்ச் மாதம் நடக்க உள்ள 98-வது ஆஸ்கர் விருது விழாவில் சிறந்த திரைப்படப் பிரிவில் போட்டியிடத் தகுதியுள்ள உலகளாவிய 201 திரைப்படங்களின் பட்டியலில் ‘காந்தாரா சாப்டர் 1’ இடம்பெற்றுள்ளது. ஆஸ்கர் அகாடமி விதித்துள்ள தகுதி வரம்புகளை இந்தப் படம் வெற்றிகரமாகப் பூர்த்தி செய்துள்ளது.
இந்தப் பட்டியிலில் காந்தாராவுடன் சேர்த்து அனுபம் கெர் இயக்கிய ‘தன்வி தி கிரேட்’ திரைப்படமும் தகுதி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. முன்னதாக கடந்த 2022 வெளியான காந்தாரா படமும் அப்போதைய ஆஸ்கார் பட்டியலில் இடம்பெற்றது. அனால் இறுதிப்பட்டியலில் இடம்பெறவில்லை. 98-வது ஆஸ்கர் விருதுகளுக்கான இறுதிப்பட்டியல் வரும் ஜனவரி 22, 2026 அன்று அறிவிக்கப்பட உள்ளது. அதில் ‘காந்தாரா சாப்டர் 1’ இறுதிப் பட்டியலுக்குள் நுழையுமா என்பதை ரசிகர்கள் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.




















