LOADING

Type to search

உலக அரசியல்

இந்தோனேசியாவில் கனமழை, நிலச்சரிவு – பலி எண்ணிக்கை 248 ஆக உயர்வு

Share

ஆசிய பகுதியில் அமைந்த தீவு நாடான இந்தோனேசியாவின் வடக்கு சுமத்ரா, மேற்கு சுமத்ரா உள்ளிட்ட மாகாணங்களில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் பல்வேறு நகரங்களில் வெள்ளப்பெருக்கும் நிலச்சரிவும் ஏற்பட்டு, 2 லட்சத்திற்கும் கூடுதலான மக்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். ஆயிரக்கணக்கான வீடுகளை வெள்ளம் சூழ்ந்து, சாலை போக்குவரத்தும் துண்டிக்கப்பட்டுள்ளது. மின்சார விநியோகமும் தடைபட்டு உள்ளது. இந்த நிலையில், இந்தோனேசியாவில் கனமழை, வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 248 ஆக உயர்ந்து உள்ளது. இந்தோனேசியாவில் நிலநடுக்கம், சுனாமி ஆகியவற்றால் பாதிக்கப்பட்டு தவித்து வரும் பொதுமக்கள் உள்ள பகுதிகளுக்கு மீட்பு குழுவினரால் சென்று சேர முடியவில்லை. இதனால் பலியானோர் எண்ணிக்கை அதிகரிக்க கூடும் என அஞ்சப்படுகிறது. இதில், வடக்கு சுமத்ரா மாகாணத்தில் மத்திய தபனுலி மாவட்டம் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. மற்ற பகுதிகளிலும் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. 100-க்கும் மேற்பட்டோரை காணவில்லை. 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் அரசு நிவாரண முகாம்களில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டு உள்ளனர். பாலங்கள் மற்றும் சாலைகள் பாதிக்கப்பட்டு உள்ளன. இதனால், மீட்பு பணிகளும் தடைபட்டு உள்ளன. மீட்பு பணியில் ராணுவ வீரர்கள், பேரிடர் மீட்பு குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர். இந்திய பெருங்கடல் பகுதியில் அமைந்த இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில் கடந்த வியாழனன்று காலை 10.26 மணியளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. 16 மைல்கள் ஆழத்தில் மையம் கொண்டிருந்த இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.6 ஆக பதிவாகி இருந்தது என அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்தது. நிலநடுக்க பாதிப்பு அபாயம் உள்ள பகுதியில் அமைந்த இந்தோனேசியாவில் கனமழை, வெள்ளம் ஆகியவற்றால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர்.