LOADING

Type to search

இலங்கை அரசியல்

இயக்கச்சியில் நியாயத்தை விரும்பும் தேசிய மக்கள் சக்தி வேட்பாளர்கள், மற்றும் ஆதரவாளர்களால் அதே கட்சிக்கு எதிராக போராட்டம்!

Share

பு.கஜிந்தன்

இயக்கச்சி பகுதியில் இன்று (1) நடைபெற்ற இளைஞர் கழக நிர்வாக தெரிவின்போது தேசிய மக்கள் சக்தி வேட்பாளர்கள்,ஆதரவாளர்களால் தேசிய மக்கள் சக்திக்கு எதிராக ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இளைஞர் கழக நிர்வாக தெரிவிற்கு இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டு துறை பிரதி அமைச்சர் எரங்க குணசேகர வரவிருந்த நிலையில் இயக்கச்சி மக்கள்,தேசிய மக்கள் சக்தி வேட்பாளர்கள், ஆதரவாளர்களால் கிராம சேவகர் அலுவலகம் முன்பு முற்றுகை போராட்டம் இன்று பிற்பகல் 03.00 மணியளவில் முன்னெடுக்கப்பட்டது.

நடைபெற்ற உள்ளூராட்சி சபை தேர்தலில் அதிக வாக்குகளை பெற்ற இயக்கச்சி பகுதி வேட்பாளர்களில் ஒருவருக்கு போனஸ் ஆசனத்தை பகிர்ந்தளிக்காமல் குறைந்த வாக்குகளை பெற்ற நபர்களுக்கு ஆசனத்தை பகிர்ந்தளித்ததாக போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் தெரிவித்தனர்.

தேசிய மக்கள் சக்தியை நம்பி வாக்களித்திருந்த போதும் தேசிய மக்கள் சக்தியின் நிர்வாகிகள் ஜனநாயக கொள்கைகளுக்கும், ஜனாதிபதியின் சித்தாந்தங்களுக்கும் எதிராக செயற்படுவதாகவும், ஊழல் வாதிகளை கட்சியில் இருந்து வெளியேற்றி இன பேதமின்றி எமக்கு தந்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டுமெனவும் கேட்டுக் கொண்டனர்.

கலந்துரையாடலிற்கு சமூகம் தரவிருந்த இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் எரங்க குணசேகர குறித்த ஆர்ப்பாட்டத்தால் கலந்துரையாடலுக்கு சமூகம் தராமல் இடையில் திரும்பிச் சென்றார்.

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் “NPP என்பது மக்களுக்காகவே தவிர மக்களை சுரண்டுவதற்காக அல்ல, எங்கள் சனாதிபதிக்கு NPPக்குள் இருந்து கொண்டே துரோகம் செய்யாதே, ஊழல் கட்சிகளுக்கு மாற்றாக இன்னொரு ஊழல் பெருச்சாளி வேண்டாம்” போன்ற வாசகங்கள் எழுதிய பாதைகளை தாங்கியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.