LOADING

Type to search

இந்திய அரசியல்

உத்தரகாண்டில் அரசுப் பள்ளி அருகே 20 கிலோ எடையுள்ள 161 ஜெலட்டின் குச்சி வெடிபொருட்கள் பறிமுதல்

Share

உத்தரகாண்டில் உள்ள ஒரு பள்ளி அருகே மொத்தம் 20 கிலோவுக்கும் அதிகமான எடையுள்ள 161 ஜெலட்டின் குச்சிகள் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

உத்தரகாண்டில் அல்மோரா மாவட்டத்தின் சுல்ட் பகுதியில் உள்ள தபாரா கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளிக்கு அருகிலுள்ள புதர்களில் இருந்து 161 ஜெலட்டின் குச்சிகளை போலீசார் மீட்டுள்ளனர். பள்ளி முதல்வர் சுபாஷ் சிங் முதலில் புதர்களில் சந்தேகத்திற்கிடமான பொட்டலங்களைக் கவனித்து உடனடியாக காவல்துறைக்கு தகவல் அளித்தார். இரண்டு காவல்துறை குழுக்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஆய்வு செய்தன. வெடிகுண்டு அகற்றும் படை மற்றும் நாய் படையும் வரவழைக்கப்பட்டன. நாய் படை நடத்திய தேடுதலின் போது, புதர்களில் சில ஜெலட்டின் குச்சி பாக்கெட்டுகள் காணப்பட்டன, மற்றவை 20 அடி தொலைவில் காணப்பட்டன. மொத்தம் 161 ஜெலட்டின் குச்சிகள் பாதுகாப்பாக சீல் வைக்கப்பட்டு வெடிகுண்டு அகற்றும் படையினரால் சேமிக்கப்பட்டன. கட்டுமானம் மற்றும் சுரங்கப் பணிகளில் பாறைகளை வெடிக்கச் செய்ய ஜெலட்டின் குச்சிகள் பொதுவாகப் பயன்படுத்தப்படுகின்றன. இருப்பினும், இவ்வளவு பெரிய அளவில் ஏன் கிராமத்திற்கு கொண்டு வரப்பட்டன என்பது குறித்து விசாரித்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். சமீபத்தில் டில்லியில் நடந்த குண்டுவெடிப்பு மற்றும் அரியானாவில் அதிக அளவு வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டதை அடுத்து நாடு முழுவதும் காவல்துறை எச்சரிக்கையுடன் செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.