LOADING

Type to search

இந்திய அரசியல்

எடப்பாடி பழனிசாமியை வீழ்த்தும் வரை ஓய மாட்டோம் – டி.டி.வி.தினகரன்

Share

பசும்பொன் முத்துராமலிங்கரின் 118-வது ஜெயந்தி மற்றும் 63-வது குருபூஜை விழாவையொட்டி பசும்பொன் முத்துராமலிங்கர் நினைவிடத்தில் அரசியல் தலைவர்கள், பல்வேறு அமைப்பினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் தேவர் நினைவிடத்தில் அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன், ஓ.பன்னீர்செல்வம், செங்கோட்டையன் மூவரும் ஒன்றிணைந்து மரியாதை செலுத்தினர். இதையடுத்து டி.டி.வி., ஓ.பி.எஸ்., செங்கோட்டையன் செய்தியாளர்களுக்கு கூட்டாக பேட்டி அளித்தனர். அப்போது டி.டி.வி.தினகரன் கூறியதாவது: துரோகத்தின் முகவரியான எடப்பாடி பழனிசாமி மட்டும் தான் எங்கள் எதிரி. துரோகத்தை வீழ்த்தும் வரை அம்மா மக்கள் முன்னேற்றக்கழகம் என்றும் ஓயாது. எடப்பாடி பழனிசாமியை வீழ்த்துவதற்காகவே ஒன்றிணைந்து உள்ளோம்.  காலதாமதம் காரணமாக சசிகலாவால் எங்களுடன் இணைந்து இன்று வர முடியவில்லை. சசிகலா எங்கு இருந்தாலும் மனதால் என்றும் எங்களுடன் இணைந்து உள்ளார். அ.தி.மு.க.வில் பிரிந்தவர்களை ஒருங்கிணைக்கும் முயற்சி தொடரும். ஓ.பன்னீர்செல்வம், செங்கோட்டையனுடன் கைகோர்த்து தேர்தலை எதிர்கொண்டு வெற்றி பெறுவோம். அ.தி.மு.க. எங்களுக்கு எதிரி இல்லை. இ.பி.எஸ். மட்டும் தான் எங்களது எதிரி. இ.பி.எஸ்.-ஐ வீழ்த்தும் வரை ஓய மாட்டோம். தொடர்ந்து ஒருங்கிணைந்து பயணிப்போம். இவ்வாறு அவர் கூறினார்.