LOADING

Type to search

உலக அரசியல்

எப்ஸ்டீனுக்கும், எனக்கும் எந்த தொடர்பும் இல்லை – டிரம்ப் அறிவிப்பு

Share

அமெரிக்காவைச் சேர்ந்தவர் ஜெப்ரி எப்ஸ்டீன். கரீபியன் தீவுப் பகுதியில் “பாவத் தீவு” என்ற பெயரில் தனித்தீவை விலைக்கு வாங்கி, அவர் சிறுமிகளை கடத்தி பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்தது. அமெரிக்க அதிபர் டிரம்ப், தொழில் அதிபர் பில்கேட்ஸ், அமெரிக்க முன்னாள் அதிபர் பில் கிளிண்டன் இங்கிலாந்து இளவரசர் பிரின்ஸ் ஆண்ட்ரூ உள்ளிட்ட பல முக்கிய தலைவர்கள் இந்த எப்ஸ்டீனுடன் நேரடியாகவோ அல்லது மின்னஞ்சல் மூலமாகவோ தொடர்பில் இருந்து சிறுமிகளை வன்கொடுமை செய்ததாக புகார்கள் எழுந்தன. இதுதொடர்பாக எப்ஸ்டீன் கைது செய்யப்பட்டார். அமெரிக்காவில் சிறையில் அடைக்கப்பட்டிருந்த அவர் மர்மமான முறையில் உயிரிழந்தார். கடந்த ஆண்டில் டிரம்ப் மற்றும் எலான் மஸ்க் இடையே ஏற்பட்ட மோதலில், எப்ஸ்டீன் வழக்குடன் டிரம்புக்கு தொடர்பு இருப்பதாக பகிரங்கமாக அறிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, எப்ஸ்டீன் வழக்கு தொடர்பான ஆவணங்களை வெளியிடுமாறு எதிர்க்கட்சியினர் தொடர்ந்து வலியுறுத்தினர்.அதனை ஏற்று, அந்த வழக்கு தொடர்பான ஆவணங்களை அமெரிக்க நீதித் துறை மற்றும் தேசிய புலனாய்வு முகமை வெளியிட்டது. எப்ஸ்டீன் தொடர்பான 35 லட்சம் பக்கங்கள் கொண்ட ரகசிய ஆவணங்கள் வெளியிடப்பட்டதாக தகவல் வெளியாகி பரபரப்பு ஏற்பட்டது. இதில் டிரம்பின் பெயர் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடங்களில் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இதுதொடர்பாக பேசிய டிரம்ப், “மறைப்பதற்கு என்னிடம் எதுவும் இல்லை. எப்ஸ்டீனுக்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை. எப்ஸ்டீன் எனது அரசியல் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டை போட்டவர். எப்ஸ்டீன் ஒரு மோசமான நபர் என்பது எனக்குத் தெரிந்தவுடன், 20 ஆண்டுகளுக்கு முன்பே அவருடனான நட்பை நான் துண்டித்துவிட்டேன். எனது புளோரிடா கிளப்பிலிருந்தும் அவரை வெளியேற்றினேன்” என்றார்.