LOADING

Type to search

இலங்கை அரசியல்

எமது படைப்பாளிகள் தென்னிலங்கைப் படைப்பாளிகளுடன் உரையாடல்களை மேற்கொள்வது அவசியம் என அழைப்பு விடுத்துள்ள பொ. ஐங்கரநேசன் !

Share

தென்னிலங்கைக் கலை, இலக்கியவாதிகளில் தமிழ்த்தேசிய விடுதலைப் போராட்டத்தின் நியாயப்பாடுகளை ஏற்றுக்கொண்டிருப்பவர்கள் வெகு சிலரே. பெரும்பாலானோர் தமது படைப்புகளில் எதிரான நிலைப்பாடுகளையே வெளிப்படுத்தி வருகின்றனர். சிங்களக் கலை, இலக்கிய உலகில் முற்போக்கு எழுத்தாளராகக் கருதப்படும் குணசேன விதான தனது சிறுகதை ஒன்றில் விடுதலைப்புலிகள் சகபோராளி ஒருவரின் சடலத்துக்குப் பதிலாக இரண்டு வாழைத்தண்டுகளைக் கொண்ட சவப்பெட்டியைப் பெற்றோரிடம் கையளித்து, பெட்டியைத் திறக்கக்கூடாது என்று அச்சுறுத்திச் சென்றதாகப் பதிவு செய்திருக்கிறார்.

இதுபோன்ற விசமத்தனமான படைப்புகள் சிங்கள வாசகர்கள் மத்தியில் தமிழ்த்தேசிய விடுதலைப் போராட்டம் பற்றிய தவறான புரிதல்களையே ஏற்படுத்தும். இதனை எதிர்கொள்வதற்கு, எமது படைப்பாளிகள் தென்னிலங்கைப் படைப்பாளிகளுடன் உரையாடல்களை மேற்கொள்வது அவசியம் என்று தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவரும், வேர்முகங்கள் நூலின் ஆசிரியருமான பொ. ஐங்கரநேசன் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஊடகங்களுக்காக பொ. ஐங்கரநேசன் கலை, இலக்கிய ஆளுமைகளுடன் நிகழ்த்திய நேர்காணல்கள் வேர்முகங்கள் எனும் தொகுப்பாக வெளியாகியுள்ளது. இதன் வெளியீட்டு விழா கடந்த ஞாயிற்றுக்கிழமை யாழ் பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கில் நடைபெற்றது. இதில் ஏற்புரையாற்றியபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

விடுதலைப் புலிகள் போராளிகளின் மரணத்தை அவர்களுடைய உறவினர்களுக்கு ஒருபோதுமே மறைத்தது கிடையாது. உரிய முறையில் உறவினர்களுக்குத் தெரியப்படுத்தி, உரிய கௌரவத்துடனேயே வித்துடல்கள் புதைக்கப்படுகின்றன. ஆனால், இலங்கை அரசாங்கம் இறந்த சிங்களச் சிப்பாய்களின் சடலங்களைக் களமுனையில் அனாதரவாக விட்டுச் சென்றதே வரலாறாக உள்ளது.

விடுதலைப் புலிகள் சர்வதேசச் செஞ்சிலுவைச் சங்கத்துக்கு ஊடாக இலங்கை அரசாங்கத்திடம் ஒப்படைத்த இராணுவத்தினரின் சடலங்களை அவர்கள் உலங்கு வானூர்தியில் எடுத்துச்சென்று வில்பத்துக் காட்டினுள்ளே வீசிவிட்டுச் சென்றதற்கு ஆதாரங்கள்கூட உண்டு. இதனை, தென்னிலங்கைச் சினிமாவின் சிறந்த இயக்குநரான பிரசன்ன விதானகே சிப்பாய் ஒருவரின் சடலத்துக்குப் பதிலாகப் பெற்றோரிடம் வாழைத்தண்டுகள் வைத்து மூடப்பட்ட பெட்டியே கையளிக்கப்பட்டதாக, தனது புறஹந்த களுவற என்ற படத்தில் காட்சிப்படுத்தி உள்ளார்.

எமது இளைய தலைமுறை அரசாங்கத்தால் மிகவும் நாசூக்காகத் தமிழ்த்தேசிய நீக்கம் செய்யப்படுகிறது. போராட்டம் பற்றித் தெரியாத இளைய தலைமுறை இலகுவில் இதற்குப் பலியாகியும் வருகிறது. இது ஆபத்தானது.

தேசியம் பற்றியும் போராட்டம் பற்றியும் பேசுவது அரசியல்வாதிகளுக்கு மாத்திரம் ஒதுக்கப்பட்டது அல்ல. ஒவ்வொரு துறையினரும் தங்கள் தங்கள் துறை சார்ந்து பங்களிப்புகளை நல்குவது அவசியம், போராட்டக் காலங்களில் அவ்வாறுதான் நிகழ்ந்தும் உள்ளது. எமது கலை, இலக்கியவாதிகள் வரலாற்றில் தமது பாத்திரத்தை உணர்ந்து தமிழ்த்தேசியப் போராட்டத்தின் நியாயப்பாடுகளை, வலிகளை இளைய தலைமுறைகளுக்குத் தமது படைப்புகளின் மூலம் எடுத்துச்சொல்ல முன்வரவேண்டும். படைப்பின் கலை அழகுக்கும் நேர்த்திக்கும் குறைவேதும் ஏற்படாமல் பிரச்சாரத்தொனி இல்லாமல் இவற்றைச் சொல்லவல்ல படைப்பாளிகள் பலர் எம் மத்தியில் உள்ளார்கள். அவர்களால் இது இயலும் என்று நம்புகிறேன் என்றும் தெரிவித்துள்ளார்.