LOADING

Type to search

உலக அரசியல்

ஐரோப்பிய ஒன்றிய தலைவர் மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி

Share

ஐரோப்பிய ஒன்றிய ஆணையமானது ஐரோப்பா கண்டத்தில் உள்ள 27 நாடுகளை கொண்டது. இதன் தலைமை அலுவலகம் பெல்ஜியம் தலைநகர் பிரஸ்சல்சில் அமைந்துள்ளது. இந்த ஆணையத்தின் முதல் பெண் தலைவராக 2019-ம் ஆண்டு உர்சுலா வான் டெர் லேயன் தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் இரண்டாவது முறையாக ஐரோப்பிய ஒன்றிய ஆணையத்தின் தலைவராக கடந்த ஆண்டு அவர் மீண்டும் பொறுப்பேற்றார். ஜெர்மனியைச் சேர்ந்த இவர் உக்ரைன்-ரஷியா போர், அமெரிக்க உறவுகள் போன்றவற்றில் கவனம் செலுத்தி வருகிறார். இந்தநிலையில் ஐரோப்பிய ஒன்றிய ஆணையத்தின் நடவடிக்கைகளில் வெளிப்படைத்தன்மை இல்லை என்று குற்றச்சாட்டு எழுந்தது. இதனையடுத்து தீவிர இடதுசாரி மற்றும் வலதுசாரி கட்சிகள் சார்பில் உர்சுலா வான் டெர் லேயனுக்கு எதிராக இரண்டு நம்பிக்கையில்லா தீர்மானங்கள் கொண்டு வரப்பட்டன. இந்த தீர்மானத்தின்போது ஐரோப்பிய ஒன்றிய ஆணையத்தில் அனல்பறக்கும் விவாதம் நடைபெற்றது. அப்போது இஸ்ரேல்-காசா போரில் ஐரோப்பிய ஒன்றிய ஆணையம் செயலற்ற தன்மையுடன் இருப்பதாகவும், வர்த்தக கொள்கை குறித்தும் அடுக்கடுக்காக அவர் மீது விமர்சனங்கள் எழுந்தன. இதனை தொடர்ந்து நம்பிக்கையில்லா தீர்மானம் மீது வாக்கெடுப்பு நடைபெற்றது. இதில் தீவிர வலதுசாரி கட்சியினர் கொண்டு வந்த தீர்மானத்துக்கு ஆதரவாக 179 பேரும், இடதுசாரி தீர்மானத்துக்கு ஆதரவாக 133 பேரும் வாக்களித்தனர். ஆனால் நம்பிக்கையில்லா தீர்மானம் நிறைவேற 361 வாக்குகளை பெற வேண்டும். இதனால் உர்சுலாவுக்கு எதிராக கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வியடைந்தது. இதற்கு முன்னர் கடந்த மாதமும் அவருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டு தோல்வியுற்றது குறிப்பிடத்தக்கது.