கச்சதீவில் இம்முறை 3 இறங்குதுறைகள் அமைக்கப்பெற்றுள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட அரச அதிபர் தகவல்.
Share
ந.லோகதயாளன்.
கச்சதீவு புனித அந்தோணியார் ஆலய உற்சவத்திற்கான பயணத்தின்போது ஏற்படும் நெருக்கடியை தவிர்க்கும் வகையில் 3 இறங்குதுறைகளை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுவதாக மாவட்ட அரச அதிபர் த.பிரதீபன் தெரிவித்தார்.
இது தொடர்பில் மாவட்ட அரச அதிபர் மேலும் தெரிவிக்கையில்,
கச்சதீவில் அமைந்துள்ள புனித அந்தோணியார் தேவாலய வருடாந்த திருவிழா 27 ஆம் திகதி மற்றும் 28 ஆம் திகதிகளில் இடம்பெறவுள்ளது. இதில் தமிழகத்தில் இருந்து 3,996 யாத்திரிகர்களும் இலங்கையில் இருந்து சுமார் 6,000 யாத்திரிகர்களும் பங்குகொள்வர் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இவ்வாறு கச்சதீவு வருகை வருகை தரும் யாத்திரிகர்கள் வருகையின்போது நெருக்கடி நிலவாதபோதும் திருவிழா நிறைவுற்று வெளியேறும்போது அனைவரும் ஒரே தடவையில் வெளியேற முற்படுவதனால் அதிக நெருக்கடி ஏற்படுவதாக சுட்டிக் காட்டப்பட்டது.
இதன் காரணமாக கச்சதீவில் வழமையாக அமைக்கப்படும் இரண்டு தற்காலிக இறங்குதுறைகளுடன் இம்முறை மேலதிகமாகவும் ஓர் இறங்குதுறை அமைக்க ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன
இதற்கமை மூன்று இறங்குதுறைகள் அமைக்கப்படுவதன் மூலம் கடந்த ஆண்டுகளில் நிலவிய அதிக நெருக்கடி தவிர்க்கப்படும்.
இதேநேரம் கச்சதீவிற்கு பயணிப்பவர்களிற்கு திடீர் சுகயீனம் ஏற்பட்டால் விரைவாக குடாநாட்டிற்கு அழைத்து வருவதற்காக ஓர் விரைவு நோயாளர் காவு படகும் ஒழுங்கமைக்கப்படுகின்றது என்றார்.




















