LOADING

Type to search

இலங்கை அரசியல்

கருணாவின் கட்டளைப்படி இனியபாரதியால் கடத்திக் கொல்லப்பட்டு பின்னர் புதைக்கப்பட்டதாக சந்தேகிக்கப்படும் தம்பிலுவில் மயானத்தில் தோண்டும் நடவடிக்கை

Share

(கனகராசா சரவணன்)

இனியபாரதி தலைமையில் கடத்தப்பட்டு காணாமல் போன 18 வயது மாணவன் பார்தீபன், முன்னாள் கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் சு.ரவீந்திரநாத், ஊடகவியலாளர் எதிதினியாக கொட ஆகியோர் படுகொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டிருப்பதாக சந்தேகிக்கப்படும் திருக்கோவில் பொலிஸ் பிரிவிலுள்ள தம்பிலுவில் இந்து மயானத்தில் தோண்டும் நடவடிக்கை ஒன்றை 31ம் திகதியன்று வியாழக்கிழமை (31) சிஜடியினர் அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்ற நீதவான் முன்னிலையில் இடம்பெற்று வருகின்றது.

கருணா கட்சியைச் சேர்ந்த இனியபாரதி என அழைக்கப்படும் கிழக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினரும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் ஒருங்கிணைப்பாளருமான கே. புஷ்பகுமார் மற்றும் அவரது சகாவான சசீந்திரன் தவசீலன் ஆகியோரை 2007-6-28 ம் திகதி திருக்கோவில் பிரதேசசபையின் முன்னாள் தவிசாளர் உதயகுமார் படுகொலை தொடர்பாக சந்தேகத்தின் அடிப்படையில் கடந்த 6ம் திகதி திருக்கோவில் மற்றும் மட்டு சந்திவெளி பகுதிகளில் வைத்து சிஜடியினர் கைது செய்தனர்.

இவர்களுடன் இனிய பாரதியின் சகாக்களான முன்னாள் சாரதி செந்தூரன், திருக்கோவில் விநாயகபுரத்தைச் சேர்ந்த தொப்பி மனாப் என்றழைக்கப்படும் விக்கினேஸ்வரன், வெலிகந்தை தீவுச்சேனையைச் சேர்ந்த பாலிகிருஷ்ணன் சபாபதி மற்றும் மட்டக்களப்பைச் சேர்ந்த யூட் என அழைக்கப்படும் ரமேஸ்கண்ணா ஆகியோரை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.

இந்த விசாரணையின் அடிப்படையில் கடந்த 2009ம் ஆண்டு யூலையில் திருக்கோவில் விநாயகபுரத்தைச் சேர்ந்த 18 வயதுடைய மாணவன் பார்தீபன், 2006 டிசம்பர் 15 ம் திகதி கொழும்பில் இருந்து மட்டக்களப்பு நோக்கி வந்த கிழக்கு பல்கலைக்ழகத்தின் உபவேந்தர் பேராசிரியர் எஸ்.ரவீந்திரநாத், 2010- ஜனவரி 26ம் திகதி ஊடகவியலாளர் பிரதீப் எக்நல கொடவை ஆகியோர் கடத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதனையடுத்து சிஜடி யினர் கைது செய்யப்பட்டவர்களை குறித்த மயானத்துக்கு கடந்த இரு தினங்களாக அழைத்துச் சென்று புதைக்கப்பட்ட இடங்களை அடையாப்படுத்தினர். இதற்கமைய குறித்த மயான இடத்தை தோண்டி சோதனை செய்வதற்கு அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்றத்தில் சிஜடி யினர் அனுமதி கோரியதையடுத்து நீதவான் ஏ.எல்.எம்.றிஸ்வான் முன்னிலையில் ஏற்;கனவே கைது செய்யப்பட்ட மட்டக்களப்பைச் சேர்ந்த யூட் என அழைக்கப்படும் ரமேஸ்கண்ணா அடையானம் காண்பிக்கும் இடத்தை பைக்கோ இயந்திரம் கொண்டு பிற்பல் 2.00 மணிக்கு தோண்டும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் போது அங்கு இதுவரை எந்தவிதமான உடற்பாகங்கள் மீட்கப்படவில்லை

இதேவேளை அந்த பகுதியில் மக்கள் திரண்டு நிற்பதை காணக்கூடியதாக இருந்தது.