கேரளாவில் 31.34 லட்சம் மகளிருக்கு மாதம் ரூ.1000 வழங்கப்படும் – பினராயி விஜயன் அறிவிப்பு
Share
அடுத்தாண்டு கேரளாவில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், முதலமைச்சர் பினராயி விஜயன் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். தமிழ்நாட்டை தொடர்ந்து கேரளாவிலும் மகளிருக்கு மாதம் ரூ.1000 வழங்கப்படும் என்று முதலமைச்சர் பினராயி விஜயன் அறிவித்துள்ளார். அரசின் எந்த திட்டத்திலும் பயனாளியாக இல்லாத 35 வயது முதல் 60 வயதுக்குள் உள்ள 31.34 லட்சம் மகளிருக்கு இந்த உதவித்தொகை வழங்கப்படவுள்ளது. இத்திட்டத்திற்கு ஆண்டுக்கு ரூ.3800 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும், பிளஸ்-2, ஐடிஐ, டிப்ளமோ அல்லது பட்டப்படிப்புகளை முடித்த பிறகு, திறன் மேம்பாட்டுத் திட்டங்கள் அல்லது போட்டித் தேர்வு பயிற்சியில் கலந்து கொள்ளும் பொருளாதாரத்தில் பின்தங்கிய இளைஞர்களுக்கு மாதந்தோறும் ரூ.1,000 உதவித்தொகை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆண்டு குடும்ப வருமானம் ரூ.1 லட்சத்திற்கும் குறைவாக உள்ள 18 முதல் 30 வயதுடைய இளைஞர்கள் இந்த திட்டத்தில் பலன்பெறலாம். இந்தத் திட்டத்தின் மூலம் சுமார் ஐந்து லட்சம் இளைஞர்கள் பயனடைவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.




















