சினிமாவில் 2-ம் அத்தியாயத்தை தொடங்கியுள்ளேன் – நடிகர் தனுஷ்
Share
வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் கடந்த 2 நாட்களாக ‘வேல்ஸ் நட்சத்திரா 2026’ என்ற கலாச்சார விழா நடைபெற்றது. விழாவில் தேசிய விருது பெற்ற நடிகர் தனுஷ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். 140 கல்லூரிகளைச் சேர்ந்த 1,150 மாணவர்கள் விழாவில் ஆர்வமுடன் பங்கேற்றனர். மொத்தம் ரூ.5 லட்சம் பரிசுத்தொகை, கோப்பைகள் மற்றும் பல்வேறு விருதுகள் வழங்கப்பட்டன.
முதல் நாள் நிகழ்வில் இயக்குநர் பிரேம் குமார், டூரிஸ்ட் பேமலி திரைப்பட இயக்குநர் அபிஷன் ஜீவந்த், நடிகர் கென் கருணாஸ், பிரபல யூடியூபர் வி.ஜெ.சித்து மற்றும் ஹர்ஷத் கான், இசை அமைப்பாளர் சாய் அபயங்கர், பாடகி ஷிவாங்கி கிருஷ்ணகுமார் உள்ளிட்டோர் கலந்துக்கொண்டனர். இரண்டாம் நாள் நிகழ்ச்சிகளில் நடிகர் தனுஷ், நடிகைகள் பிரியங்கா மோகன், கல்யாணி பிரியதர்ஷன் ஆகியோர் பங்கேற்றனர். நடிகர் தனுஷ் விழாவில் பேசியதாவது: ”நமக்கு கிடைத்துள்ளதை பெரிய ஆசிர்வாதமாக நினைத்து அதை தக்கவைத்து கொள்ள இரவும் பகலும் பாடுபடவேண்டும். திரைத்துறையில் 25 ஆண்டுகள் என்பது மிகவும் குறைவு. தற்போது என் திரைப்பயணத்தின் இரண்டாம் அத்தியாயத்தை தொடங்கியுள்ளேன். எனக்கும் வேல்ஸ் பல்கலைக்கழகத்திற்கும் தொடர்பு உண்டு. என் முதல் படம் துள்ளுவதோ இளமை இங்கே தான் எடுத்தோம். அதுமட்டுமல்ல அந்த திரைப்படத்தில் ஒரு காட்சியில் ஐசரி கணேஷ் சாரிடம் பூட்ஸ் காலால் அடிவாங்கி இருக்கிறேன். பள்ளி மற்றும் கல்லூரி நாட்கள் தான் நம் வாழ்நாளில் சிறந்த நாட்களாக அமையும். மெடிட்டேஷன் மற்றும் மேனிபெஸ்டேஷன் இவை இரண்டும் நீங்கள் எட்ட துடிக்கும் உயரங்களை அடைய உதவும். இதை பின்பற்றுங்கள் என்றார்.




















