சென்னையில் பா.ஜ.க. கேட்கும் 5 தொகுதிகள்- அ.தி.மு.க. அதிர்ச்சி
Share
அ.தி.மு.க. பா.ஜ.க. கூட்டணியில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை இன்னும் அதிகாரப்பூர்வமாக நடைபெறவில்லை. ஆனால் பா.ஜ.க. போட்டியிட விரும்பும் தொகுதிகள் பட்டியலை அ.தி.மு.க. மேலிடத்திடம் கொடுத்துள்ளனர். அதன் அடிப்படையில் இரு கட்சிகளை சேர்ந்த தலைவர்களும் பேசி வருவதாக கூறப்படுகிறது. சென்னையில் வேளச்சேரி, மயிலாப்பூர், ஆயிரம் விளக்கு, தி.நகர், விருகம்பாக்கம் ஆகிய 5 தொகுதிகளையும் கேட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த தொகுதிகளை பா.ஜ.க. கேட்பது அ.தி.மு.க. தரப்பில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. காரணம், கடந்த தேர்தலில் வேளச்சேரியில் அ.தி.மு.க. 4 ஆயிரத்து 352 வாக்குகள் வித்தியாசத்தில்தான் வெற்றி வாய்ப்பை நழுவ விட்டது. அதேபோல் மயிலாப்பூர் தொகுதியில் கடந்த தேர்தலில் அ.தி.மு.க. 55 ஆயிரத்து 759 வாக்குகள் பெற்று இருந்தது. ஆயிரம் விளக்கில் பா.ஜ.க. போட்டியிட்டது. தியாகராய நகர் தொகுதியை பொறுத்தவரை வெறும் 137 வாக்குகள் வித்தியாசத்தில் தான் அ.தி.மு.க.வின் வெற்றி வாய்ப்பு பறிபோனது. விருகம்பாக்கம் தொகுதியிலும் அ.தி.மு.க. தோல்வியை தழுவியிருந்தாலும் 55 ஆயிரத்து 526 வாக்குகள் பெற்று இருந்தது. எனவே மேற்கண்ட 5 தொகுதிகளிலும் கூடுதல் கவனம் செலுத்தி கைப்பற்றுவதில் அ.தி.மு.க. தீவிரம் காட்டி வருகிறது. இந்த தொகுதிகளில் குறிப்பிட்ட சிலரை அடையாளப்படுத்தி தேர்தல் வேலைகளையும் தொடங்கி விட்டனர். தங்களுக்கு சாதகமான தொகுதிகளை பா.ஜ.க. கேட்டு வலியுறுத்துவது அ.தி.மு.க. தலைமைக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தி இருப்பதாக கூறப்படுகிறது. இதற்கிடையில் பா.ஜ.க.வும் இந்த தொகுதிகளை குறி வைத்து தேர்தல் பணிகளை தொடங்கிவிட்டனர். ஆனால் அ.தி.மு.க. தரப்பில் இந்த தொகுதிகளை விட்டு கொடுக்க தயங்குவதாக கூறப்படுகிறது. யாருக்கு எந்த தொகுதி என்பது முடிவாகும் வரை இந்த குழப்பம் இருக்கத்தான் செய்யும் என்கிறார்கள் இரு கட்சியினரும்.




















