ஜப்பானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 7.5 ஆக பதிவு
Share
ஜப்பான் நாட்டில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. அந்நாட்டின் கடல் பகுதியில் நேற்று இரவு 7.45 மணிக்கு (இந்திய நேரப்படி) நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.5 ஆக பதிவாகி உள்ளது என தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் அதிர்ந்தன. இதனால், அதிர்ச்சியடைந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி சாலைகளில் தஞ்சமடைந்தனர். இந்த சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து அப்பகுதிக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 60 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், 41.05 டிகிரி வடக்கு அட்சரேகையிலும், 142.37 டிகிரி கிழக்கு தீர்க்கரேகையிலும் இருக்கும் என முதலில் தீர்மானிக்கப்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் மற்றும் பாதிப்பு குறித்து எந்தவித தகவலும் உடனடியாக வெளியாகவில்லை.




















