நேபாளம்: மலையில் இருந்து உருண்ட பேருந்து – 19 பேர் மரணம்
Share
நேபாளத்தில் பொகாரா என்ற சுற்றுலா நகரில் இருந்து தலைநகர் காத்மண்டு நோக்கி 40-க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றி கொண்டு பேருந்து ஒன்று புறப்பட்டு சென்றது. அந்த பேருந்து நள்ளிரவில் பிருத்வி நெடுஞ்சாலையை கடந்து காலை மலைப்பகுதியில் பயணித்து கொண்டிருந்தது. அப்போது, திடீரென மலைச்சரிவில் உருள தொடங்கியது. அந்த பேருந்து பெனிகாட் பகுதியருகே பாய்ந்து ஓடி கொண்டிருந்த திரிசூலி ஆற்றின் கரையோரத்தில் வந்து நின்றது. இந்த விபத்தில் சிக்கி பயணிகளில் 19 பேர் பலியானார்கள். இது தவிர 25 பேர் காயமடைந்தனர். தகவல் அறிந்து, மீட்பு குழுவினர் உடனடியாக சம்பவ பகுதிக்கு சென்று பேருந்துக்குள் சிக்கியவர்களை பாதுகாப்பாக மீட்டு, சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். விபத்து பற்றி காவல்துறை வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்த ஆற்றில் 2024-ம் ஆண்டு 2 பேருந்துகள் கவிழ்ந்தன. இதில், அவற்றில் பயணித்த 65 பேரின் நிலை என்னவென தெரியவில்லை. பலர் பலியாகியும் அல்லது காணாமல் போயும் உள்ளனர். ஒரே ஒரு பேருந்து மட்டும் ஆற்று மணலில் சிக்கி உருக்குலைந்து கிடந்தது. அது நடப்பு ஆண்டில் கண்டறியப்பட்டது.




















