மண்டைதீவு சர்வதேச கிரிக்கெட் மைதான திட்டம் சட்டவிரோதமானது என ஜனாதிபதியிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது
Share
ந.லோகதயாளன்.
யாழ்ப்பாணம் மண்டைதீவில் முன்மொழியப்பட்டுள்ள சர்வதேச துடுப்பாட்ட மைதானம் மற்றும் விளையாட்டு வளாகத்திட்டம் சட்டவிரோதமானது எனவும், இது அத்தீவின் சூழலியல் மற்றும் உள்ளூர் சமூகங்களுக்குப் பாரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தும் எனவும் இலங்கை வனவிலங்கு மற்றும் இயற்கை பாதுகாப்பு சங்கம் எச்சரித்துள்ளது.இத்திட்ம் அமையவுள்ள பகுதியில் கண்டல் தாவரங்கள், கடல் புற்கள், உப்பளங்கள் மற்றும் மண்டைதீவு வனச்சரகம் போன்ற முக்கியமான சூழலியல் மண்டலங்கள் இருப்பதாக ஜனாதிபதி அநுரகுமார திஸநாயக்கவுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் இலங்கை வனவிலங்கு மற்றும் இயற்கை பாதுகாப்புச் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
கடலோரப் பாதுகாப்பு மற்றும் கடலோர வள முகாமைத்துவ சட்டத்தின் கீழ் தேவையான எவ்வித
சட்டபூர்வ அனுமதிகளையும் சிறிலங்கா கிரிக்கெட் நிறுவனம் பெறவில்லை என அந்தச் சங்கம்
குற்றஞ்சாட்டியுள்ளது. மண்டைதீவு ஒரு இயற்கை வெள்ளத் தடுப்பு வலயமாகும்.
மழைக்காலங்களில் இப்பகுதி நீரில் மூழ்கும் வாய்ப்புள்ளதால், இங்கு பாரிய கட்டுமானங்களை
மேற்கொள்வது நிதி விரயத்துக்கும் தொடர்ச்சியான பராமரிப்பு செலவுகளுக்கும் வழிவகுக்கும். அதிகாரிகளுக்கு தவறான தகவல்கள் வழங்கப்பட்டுள்ளதாக கவலை தெரிவித்துள்ள குறித்த சங்கம், இது இலங்கை யின் நிலையான அபிவிருத்திக் கொள்கைக்கு எதிரானது என்றும் கூறியுள்ளது.
‘எங்கள் எதிர்ப்பு யாழ்ப்பாணத்தில் விளையாட்டு வசதிகளை மேம்படுத்துவதற்கு எதிரானது அல்ல. மாறாக, சூழலியல் முக்கியத்துவம் வாய்ந்த மண்டை தீவில் இத்திட்டத்தை முன்னெடுப்பதற்கும், சுற்றுச் சூழல் சட்டங்கள் மீறப்படுவதற்கும் மட்டுமே’ என
இலங்கை வனவிலங்கு மற்றும் இயற்கை பாதுகாப்புச் சங்கம் தெளிவுபடுத்தியுள்ளது. இத்திட்டத்தை உடன டியாக நிறுத்தி இது குறித்து விசாரணை நடத்துமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது




















