LOADING

Type to search

இலங்கை அரசியல்

முள்ளிக்குளம் கடற்படை முகாமைச் சேர்ந்த கடற்படை சிப்பாய் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்பு.

Share

(மன்னார் நிருபர்)

(4-1-2024)

மன்னார் மாவட்டம் முசலி பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள முள்ளிக்குளம் கடற்படை முகாமில் கடமையாற்றும் கடற்படை சிப்பாய் ஒருவர் இன்றைய தினம் வியாழக்கிழமை (4) காலை தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

கடற்படை முகாமிற்கு வெளியில் உள்ள காட்டுப் பகுதியில் உள்ள மரம் ஒன்றில் தூக்கில் தொங்கிய நிலையில் குறித்த கடற்படை சிப்பாய் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

சடலமாக மீட்கப்பட்ட கடற்படைச் சிப்பாய் 33 வயது உடையவர் எனவும் மூன்று பிள்ளைகளின் தந்தை என தெரிய வந்துள்ளது.

முள்ளிக்குளம் கடைப்படை முகாமில் உள்ள கடற்படையினரின் விடுதியில் மனைவி மற்றும் பிள்ளைகளுடன் குறித்த கடற்படை சிப்பாய் வாழ்ந்து வந்துள்ளார்.

குறித்த கடற்படை சிப்பாய் கடந்த இரண்டாம் திகதி செவ்வாய்க்கிழமை மதியம் குறித்த கடற்படை முகாமில் இருந்து மோட்டார் சைக்கிளில் வெளியில் சென்ற நிலையில் அவர் மீண்டும் முகாமிற்கு திரும்பவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

தனது கணவர் காணாமல் போனமை குறித்து அவரது மனைவி நேற்றைய தினம் புதன்கிழமை (3) சிலாபத்துறை போலீஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றை பதிவு செய்திருந்தார்.

இந்த நிலையிலே குறித்த கடற்படை சிப்பாய் தூக்கில் தொங்கிய நிலையில் இன்று (4) காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் சிலாபத்துறை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர்.