LOADING

Type to search

இலங்கை அரசியல்

யாழ்ப்பாணம்- சுழிபுரம் வடக்கு ஆறுமுக வித்தியாலயத்தின் நிறுவுனர் நினைவு நாளும், பரிசளிப்பு விழாவும் சிறப்பாக நடைபெற்றன!

Share

பு.கஜிந்தன்

சுழிபுரம் வடக்கு ஆறுமுக வித்தியாலயத்தின் நிறுவுனர் நினைவு நாளும், பரிசளிப்பு விழாவும், 115வது ஆண்டு விழாவும் 29ம் திகதி புதன்கிழமை அன்றையதினம் பாடசாலையின் மண்டபத்தில் இடம்பெற்றது.

விருந்தினர்கள் மாலை அணிவித்து விழா மண்டபத்திற்கு அழைத்து வரப்பட்டனர். அதனைத் தொடர்ந்து மங்கல விளக்கேற்றல் இடம்பெற்றது. தொடர்ந்து இறை வணக்கம், வரவேற்புரை, தலைமையுரை, விருந்தினர்கள் உரைகள், மாணவர்களது கலை நிகழ்வுகள், விருந்தினர்களுக்கான நினைவுச் சின்னங்கள் வழங்கல் மற்றும் பரிசில்கள் வழங்கல் என்பன இடம்பெற்றன.

மேலும் இன்றைய நிகழ்வின்போது அதிபர்கள் தினமும் கடைப்பிடிக்கப்பட்டதுடன், ஆறுமுக அரும்புகள் சஞ்சிகை வெளியீடும், சிறுவர் விளையாட்டு முற்றம் திறப்பு நிகழ்வும் இடம்பெற்றது.

பாடசாலையின் முதல்வர் எம்.சி.சுதாகரன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் பிரதம அதிதியாக யாழ்ப்பாணம் தொழில்நுட்பவியல் கல்லூரியின் பணிப்பாளர் ஆறுமுகம் நற்குணேஸ்வரனும், சிறப்பு விருந்தினராக சிரேஷ்ட சட்டத்தரணி சோ.தேவராஜாவும், கௌரவ விருந்தினர்களாக முன்னாள் அதிபர்களான ந.பாலச்சந்திரன், சி.திவாகரனும் ஆகியோரும் கலந்து சிறப்பித்ததுடன் நிறுவுனர் நினைவுப் பேருரையை சட்டத்தரணி மு.தர்சிகா ஆற்றினார்.

இந்த விழாவில் ஆசிரியர்கள், அயற்பாடசாலை அதிபர்கள், அயற்பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்கள், பழைய மாணவர்கள், பெற்றோர் மற்றும் நலன்விரும்பிகள் என பலரும் கலந்துகொண்டனர்.