யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை பணியாளர்களின் அசமந்தம் – நோயாளிகள் புறக்கணிக்கப்படுவதால் உயிராபத்து ஏற்படும் என அச்சம்!!
Share
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்ட நோயாளி ஒருவருக்கு தகுந்த முறையில் மருந்து கட்டாமையினால் அந்த காயம் மோசமான நிலைக்குச் சென்ற பிடித்த சம்பவம் ஒன்று அண்மையில் இடம்பெற்றுள்ளதாக பாதிக்கப்பட்ட நோயாளியின் மனைவி கருத்து தெரிவிக்கையில்,
எனது கணவர் கடந்த 2009ஆம் ஆண்டு யுத்தத்தால் பாதிக்கப்பட்டதால் நடக்க முடியாத நிலையில் உள்ளார். கடந்த 16 வருடங்களாக சக்கர நாற்காலியிலேயே அவரை பராமரித்து வருகின்றோம்.
இந்நிலையில் இந்தமாதம் அவருக்கு காய்ச்சல் ஏற்பட்டதுடன், காலில் கட்டும் ஏற்பட்டது. ஆகையால் அவரை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற நிலையில் காலில் சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
இந்நிலையில் அந்த காயத்திற்கு மருந்து கட்டுவதற்கு செல்கின்றவேளை அவர்கள் அங்கே அசமந்தப்போக்கில் ஈடுபட்டனர். மருந்து கட்டுவதற்கு வெளிநோயாளர் பிரிவுக்கு கொண்டு சென்றால் விடுதிக்கு கொண்டு செல்லச் சொல்வார்கள், விடுதிக்கு சென்றால் வெளிநோயாளர் பிரிவுக்கு கொண்டு செல்ல சொல்லுவார்கள். இவ்வாறு மூன்று தடவைகள் திருப்பி அனுப்பினார்கள்.
தொடர்ச்சியாக மூன்று தடவைகள் மருந்து கட்டாத நிலையிலேயே இன்று அந்த காயத்தில் புளு வைத்துள்ளது. அந்த காயம் பெரிய காயம் என்பதால் ஒன்றுவிட்டு ஒருநாள் மருந்து கட்ட வேண்டும். ஆனால் மூன்று நாட்களுக்கு ஒருதடவை தான் வருமாறு கூறுவார்கள். அவ்வாறு போனாலும் மருந்து கட்ட மாட்டார்கள்.
மருந்து கட்டுமாறு வைத்தியர்கள் கூறினாலும் அங்கு இருக்கின்ற பணியாளர்கள் அதனை செய்ய மாட்டார்கள். 8ஆம் இலக்க விடுதியில் இருக்கின்ற ஒரு பணியாளர் நோயாளர்களை மிகவும் கீழ்த்தரமாக நடத்துகின்றார். மருந்து கட்டுவதற்கான துணியை வெளியில் வாங்கி வருமாறு கூறுவார்கள். அதையும் நாங்கள் வாங்கி கொடுக்கின்றோம்.
தனியார் வைத்தியசாலைகளுக்கு கொண்டு சென்றாலும் காயம் பெரிதாக இருப்பதால் மருந்து கட்டுவதற்கு மறுப்பு தெரிவிக்கின்றனர்.
நானும் உடல்நிலை பாதிக்கப்பட்ட ஒருவர். நடக்க முடியாத அவரை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும்போது அங்கு இருக்கின்ற சுகாதார பணியாளர்கள் சக்கர நாற்காலியில் அவரை கொண்டு செல்வதற்கு உதவி செய்யவும் மாட்டார்கள்.
அவர் சந்திரசிகிச்சையின் பின்னர் வீடு திரும்பிய நிலையில் ஆஸ்துமா காரணமாக வைத்தியசாலை விடுதியில் மீண்டு அவரை சேர்ப்பித்தோம். அப்போது காயத்தில் இருந்து துர்நாற்றம் வந்த நிலையில் அதனை அங்கு இருக்கின்ற பணியாளர்களுக்கு பலதடவைகள் தெரியப்படுத்தினோம். ஆனால் அவர்கள் மருந்து கட்டவில்லை. பின்னர் இரவு 9.30 மணியளவில் வைத்தியர் பிரசன்னாவிடம் கூறியவேளை கடமை முடிந்து அவர் வீடு செல்ல இருந்த நிலையிலும் உடனடியாக தியேட்டருக்கு எடுத்து தானே மருந்து கட்டினார்.
மிகவும் கஷ்டத்தின் மத்தியிலேயே நாங்கள் இவ்வாறு வைத்தியசாலைக்கு கொண்டு செல்கின்றோம். முச்சக்கர வண்டிக்கு காசு கொடுக்க வேண்டும், ஒருவர் நேரத்தை ஒதுக்கி கொண்டு செல்ல வேண்டும். நாங்கள் ஆர்வமாக கொண்டு சென்றாலும் அவர்கள் சேவையை சரியாக செய்வதில்லை.
கடந்த 2023ஆம் ஆண்டு வவுனிக்குளத்தில் எமது இரண்டு ஆண் பிள்ளைகள் தண்ணீரில் மூழ்கிய உயிரிழந்தனர். தம்பி தண்ணீரில் மூழ்கிய நிலையில் அவரை காப்பாற்றுவதற்காக அண்ணா சென்ற நிலையில் இருவரும் உயிரிழந்துள்ளனர். இவ்வாறு இரண்டு பிள்ளைகளையும் பறிகொடுத்த தந்தைக்கும் இந்த நிலை என எண்ணும்போது வேதறையாக இருக்கிறது.
வறுமையில் வாடும் மக்கள் சிகிச்சைக்காக வரும்போது அவர்களுக்கு தேவையான சிகிச்சைகளை வழங்குங்கள். தனியார் வைத்தியசாலைக்கு செல்வதற்கு எல்லோரிமும் பணம் இருக்காது என்றார்.அந்தத் தாய்!




















