LOADING

Type to search

இலங்கை அரசியல்

யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் புதிய ஆண்டுக்கான வேலைகள் ஆரம்பம்!

Share

பு.கஜிந்தன்

யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தின் ஏற்பாட்டில் 2025 ம் ஆண்டுக்கான புதிய வேலை ஆரம்பநாளின் உறுதிமொழி எடுக்கும் நிகழ்வு 01-01-2025 அன்று காலை யாழ்ப்பாணம் மாவட்ட செயலக முன்றலில் இடம்பெற்றது.

இதன்போது மாவட்ட செயலக முன்றலில் தேசிய கொடியினை பதில் மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் எற்றிவைத்தார். பின்பு தேசியகீதம் இசைக்கப்பட்டது. இரண்டு நிமிட அகவணக்கம் செலுத்தப்பட்டதை தொடர்ந்து அரச உயர் அதிகாரிகள், பதவிநிலை உத்தியோகத்தர்கள், அலுவலர்கள் இணைந்து புதிய வேலைகளை ஆரம்பிக்கும் நாளான அன்று சத்தியப்பிராமணம் எடுத்துக்கொண்டனர்.

அதன்பின்னர் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் ஒன்று கூடிய அரச அதிகாரிகள், பதவிநிலை உத்தியோகத்தர்கள், அலுவலர்கள் ஆகியோர், வருட ஆரம்ப நாள் தொடர்பாக ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க, ஜனாதிபதி செயலகத்தில் ஆற்றிய உரையினை காணொளி மூலமாக கண்டுகளித்தனர்.

இவ்நிகழ்வில் யாழ்ப்பாணம் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் (காணி) எஸ்.ஸ்ரீமோகனன், திட்டமிடல் உதவிப் பணிப்பாளர் எஸ்.சுரேந்திரன், மாவட்ட செயலக பதவிநிலை உதவி பணிப்பாளர்கள், பதவிநிலை உத்தியோகத்தர்கள், அலுவலகர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.