LOADING

Type to search

இலங்கை அரசியல்

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் உரையாற்றவுள்ள சட்டத்தரணி சுவஸ்திகா அருளிங்கம் என்பவருக்கு மாணவர்கள் கடும் எதிர்ப்பு!

Share

தமிழ் மக்களுக்காக போராடியவர்களை பாசிசவாதிகள் மற்றும் இனச்சுத்திகரிப்பை மேற்கொண்டவர்கள் என்று பொய் உரைத்தவர்களுக்கு யாழ். பல்கலைக்கழகத்தில் இடமில்லை என யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது.

அந்த அமைப்பு வெளியிட்ட கண்டன அறிக்கையிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

வெள்ளிக்கிழமை அன்றையதினம் 5ம் திகதி யாழ்ப்பாண . பல்கலைக்கழகத்தில் நிகழ்வு ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டது. அந்த நிகழ்வில் சட்டத்தரணி சுவஸ்திகா அருளிங்கமும் உரையாற்றுவதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டது. அவர் உரையாற்றுவதற்கு எதிராகவே இந்த கண்டன அறிக்கை வெளியிட்டது. அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

யாரைக்கேட்டு பல்கலைக்கழக நிர்வாகம் இதற்கு அனுமதியளித்தது என்று தெரியவில்லை. விரிவுரைகள் ஏதுமற்று மாணவர்கள் பல்கலைக்கழகத்தில் இல்லாத நிலையில் இப்படி ஒரு திட்டமிட்ட முடிவுக்கு நிர்வாகம் நகர்ந்ததா என்கின்ற சந்தேகம் மேலெழுகின்றது.

இந்த குறிப்பிட்ட நபரை நாளை உரையாற்ற அனுமதிப்பதை பல்கலைக்கழக மாணவர்கள் வன்மையாக கண்டிக்கின்றோம். ஏன் பல்கலைக்கழக சமூகமே கண்டிக்கின்றது.

தமிழ் மக்களுடைய அமைதி வழிப் போராட்டங்கள் பற்றியோ அரசியலமைப்பு பற்றியோ நிச்சயமாக கருத்துரை நடாத்துவது அவசியம். ஆனால் அதற்கு நிர்வாகம் யாரை அழைக்கின்றோம், அவர்கள் இதற்கு முன் என்ன நிலைப்பாட்டில் இருந்தார்கள்? அவர்களுடைய உள்நோக்கம் என்ன என்பதனை தெரிந்து அனுமதிக்க வேண்டும்.
பல்கலைக்கழகத்தின் மகுட வாசகம்
“மெய்ப்பொருள் காண்பதறிவு”

இந்த மண்ணில் மிகுந்த வலிதோய்ந்து தங்கள் அண்ணா அக்காமார்களை இந்த அறவழி விடுதலைப்போராட்டத்திற்கு கொடுத்த தமிழ் மாணவர்கள் அதிகமானோர் கல்வி கற்கும் பல்கலைக்கழகத்தில் ஏதுமறியாமல் தங்கள் சிந்தனைகளை திணிக்கும் நபர்களை உள்நோக்கம் அறியாது உரையாற்ற அனுமதிப்பது ஆகச்சிறந்த வெண்மையான பாலுள்ள பானையில் ஒரு துளி விஷம் கலப்பது போன்றது.

ஆகவே நாளை இந்நபரை உரையாற்ற அனுமதிப்பதை பல்கலைக்கழக நிர்வாகம் தவிர்க்க வேண்டும். இல்லையேல் நாளை பல்கலைக்கழக மாணவர்கள் ஜனநாயக ரீதியான போராட்டங்களை முன்னெடுப்பார்கள் என்பதனை தெரியப்படுத்துகின்றோம் என குறிப்பிடப்பட்டுள்ளது.