LOADING

Type to search

சினிமா

ராஜமவுலி-மகேஷ் பாபு கூட்டணியில் உருவாகும் படம் ‘வாரணாசி’

Share

இந்திய திரையுலகின் பிரம்மாண்ட இயக்குநர் எஸ்.எஸ். ராஜமவுலி இயக்கத்தில், நடிகர் மகேஷ் பாபு நாயகனாக நடிக்கும் புதிய திரைப்படத்திற்கு ‘வாரணாசி’ என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. எம்.எம். கீரவாணி இசையமைக்கும் இந்தப் படத்தில், நடிகர்கள் பிருத்விராஜ் சுகுமாறன் மற்றும் பிரியங்கா சோப்ரா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். ‘வாரணாசி’ படம், உலக அளவிலான ஆக்ஷன்–அட்வென்சர் திரைப்படமாக உருவாகி வருவதாக இயக்குநர் ராஜமவுலி ஏற்கனவே தெரிவித்திருந்தார். குறிப்பாக, ‘இந்தியானா ஜோன்ஸ்’ பாணியில் அமைந்த கதை வடிவம் கொண்ட இப்படத்தின் முக்கிய காட்சிகள் காசியை பின்னணியாக கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மகேஷ் பாபு ஏற்கும் கதாபாத்திரம், அனுமனை நினைவூட்டும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதற்கிடையில், இப்படத்தின் தலைப்பு மற்றும் முதல்காட்சி பதாகை வெளியீட்டு விழா ஐதராபாத்தில் உள்ள ராமோஜி பிலிம் சிட்டியில் பிரமாண்டமாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்காக மட்டும் ரூ.30 கோடி செலவிடப்பட்டதாக திரையுலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், ‘வாரணாசி’ படத்தின் பட்ஜெட் குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி, ரூ.1000 கோடி செலவில் இப்படம் தயாராகி வருவதாக கூறப்படுகிறது. இதனால், இந்திய சினிமாவின் மிகப்பெரிய பட்ஜெட் படங்களில் ஒன்றாக ‘வாரணாசி’ உருவாகி வருவது உறுதியாகியுள்ளது. இந்த திரைப்படம் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் திரைக்கு வர உள்ளதாக படக்குழு சார்பில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ராஜமவுலி–மகேஷ் பாபு கூட்டணியில் உருவாகும் இந்த படம், ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.