LOADING

Type to search

உலக அரசியல்

வங்காள தேசத்தில் பிப்ரவரி 12-ம் தேதி பொதுத்தேர்தல்

Share

வங்காளதேசத்தில் பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா ஆட்சிக்கு எதிராக கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடந்த மாணவர்கள் போராட்டம் தீவிரம் அடைந்தது. இதனால் ஷேக் ஹசீனா வங்காள தேசத்தில் இருந்து தப்பி இந்தியாவில் தஞ்சம் அடைந்துள்ளார். தற்போது இடைக்கால அரசின் தலைவராக பொருளாதார நிபுணர் முகமது யூனுஸ் நியமிக்கப்பட்டார். இதற்கிடையே மாணவர்களின் போராட்டத்தை ஒடுக்க மனித குலத்திற்கு எதிரான குற்றங்களில் ஈடுபட்டதாக ஷேக் ஹசீனா மீது வழக்கு தொடரப்பட்டு விசாரணை நடந்தது. இவ்வழக்கில் ஷேக் ஹசீனாவுக்கு வங்காள தேசத்தின் சர்வதேச குற்றங்கள் தீர்ப்பாயம் சமீபத்தில் மரண தண்டனை விதித்து தீர்ப்பு அளித்தது. இதையடுத்து அவரை நாடு கடத்தவும் இந்தியாவிடம் வங்காள தேசம் கோரிக்கை விடுத்தது. வங்காள தேசத்தின் கோரிக்கையை இந்தியா ஆராய்ந்து வருவதாக வெளியுறவுத் துறை தெரிவித்தது. இந்தநிலையில், முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா பதவி விலகிய பிறகு, வங்காளதேசத்தின் 13-வது தேசிய நாடாளுமன்றத் தேர்தல் அடுத்த ஆண்டு பிப்ரவரி 12 ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை தலைமைத் தேர்தல் ஆணையர் நசிருதீன் வெளியிட்டார். சுதந்திரமான ஜனநாயக முறையில் வாக்கெடுப்பை நடத்த முடியும் என்பதை உலகிற்கு நிரூபிக்க நாடு தயாராக உள்ளது என்று அவர் தெரிவித்தார். மக்கள் போலியான செய்திகள் மற்றும் வதந்திகளுக்கு எதிராக விழிப்புடன் இருக்குமாறு அவர் வலியுறுத்தினார். பொதுத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு மற்றும் ஜூலை சாசன வாக்குப்பதிவு ஆகிய இரண்டும் பிப்ரவரி 12-ஆம் தேதி ஒரே நேரத்தில் நடைபெறும் என்றும் தலைமைத் தேர்தல் ஆணையர் உறுதிப்படுத்தினார்.