வடகிழக்கு பருவமழை: பொதுமக்களுக்கு உதவ அதிமுகவினருக்கு எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தல்
Share
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. மேலும், வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி நிலைகொண்டுள்ளது. இதன் காரணமாக மேலும் சில நாட்களுக்கு தமிழகத்தில் மழை நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், வடகிழக்கு பருவமழையால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு உதவும்படி அதிமுகவினரை அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்தத் தாழ்வு பகுதியால் தலைநகர் சென்னை உள்ளிட்ட வடக் கடலோர மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் கனமழைக்கான எச்சரிக்கையினை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது. மழை அதிகமாகும் வாய்ப்பு உள்ளதால், போர்க்கால அடிப்படையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என திமுக அரசை வலியுறுத்துகிறேன். பொதுமக்கள் அனைவரும் வானிலை ஆய்வு மையம் அறிவிப்புகளின் அடிப்படையில், பாதுகாப்போடு இருக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். பொதுமக்களுக்கு தேவையான உதவிகளை மேற்கொள்ள அதிமுக நிர்வாகிகள் மற்றும் கழக உடன்பிறப்புகள் தயார் நிலையில் இருக்குமாறு அறிவுறுத்துகிறேன். இவ்வாறு தெரிவித்துள்ளார்.




















