LOADING

Type to search

இந்திய அரசியல்

விஜய் மக்கள் சந்திப்பு பிரசாரம் தற்காலிகமாக ஒத்திவைப்பு

Share

மக்கள் சந்திப்பு தொடர்பான புதிய விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும் என்று அக்கட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

      கரூரில் த.வெ.க. தலைவர் விஜய் கடந்த மாதம் 27-ந் தேதி மக்கள் சந்திப்பை நடத்தினார். விஜய்யை பார்ப்பதற்காக அந்த கூட்டத்துக்கு ஏராளமானோர் வந்திருந்தனர். அப்போது துரதிருஷ்டவசமாக ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிர் இழந்தனர். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்திற்கு பிறகு விஜய் வெளியில் எங்கும் செல்லாமல் நீலாங்கரை வீட்டில் இருந்து வந்தார். அவ்வப்போது பட்டினப்பாக்கம் இல்லத்திற்கும் சென்று வந்தார். கட்சியின் அடுத்தடுத்த சுற்றுப்பயணங்களும் தள்ளிவைக்கப்பட்டது. 41 பேர் பலியான சம்பவம் தொடர்பாக கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த், இணைப் பொதுச்செயலாளர் நிர்மல் குமார், கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் மதியழகன் உள்ளிட்டோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதில் மதியழகன் கைது செய்யப்பட்டுள்ளார்.

தொடர்ந்து த.வெ.க. சமூக வலைத்தள நிர்வாகிகள் மீதும் வழக்குகள் பாய்ந்தன. கடந்த 3 நாட்களாக எந்த பேட்டியும் கொடுக்காமல் இருந்து வந்த விஜய், கரூர் சம்பவம் தொடர்பாக நேற்று தனது மவுனத்தை கலைத்தார். நடந்த சம்பவம் குறித்தும், தனது அடுத்தக்கட்ட அரசியல் பயணம் குறித்தும் விஜய் சமூக வலைதள பக்கத்தில் பரபரப்பான வீடியோ ஒன்றை பதிவு செய்தார்.

அந்த காணொளியில் கரூரில் எங்களுக்கு தரப்பட்ட இடத்தில்தான் பேசினோம். நாங்கள் எந்த தவறும் செய்யவில்லை. பழிவாங்க நினைத்தால் என்னை என்ன வேண்டுமானாலும் செய்யுங்கள் என்று விஜய் உருக்கமான காணொளி பதிவு ஒன்றை வெளியிட்டார். இந்தநிலையில், தவெக தலைமை நிலையச் செயலக வெளியிட்ட அறிவிப்பில், கழகத் தோழர்களுக்கு வணக்கம்.நம் சொந்தங்களை இழந்த வேதனையிலும் வருத்தத்திலும் நாம் இருக்கும் இச்சூழலில், நம் கழகத் தலைவர் அவர்களின் அடுத்த இரண்டு வாரங்களுக்கான மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியானது தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுகிறது. இந்த மக்கள் சந்திப்பு தொடர்பான புதிய விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும் என்பதை நம் கழகத் தலைவர் அவர்களின் ஒப்புதலோடு தெரிவித்துக்கொள்கிறோம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.