LOADING

Type to search

இலங்கை அரசியல்

வேலணையில் அரசியல் கட்சியொன்றின் நபர்கள் கொண்ட குழு மதுபோதையில் அடாவடித்தனம்

Share

– பல மில்லியன் பெறுமதி மிக்க தேவாலயம் ஒன்றின் சொத்துகள் நாசம்!

மெரிஞ்சிமுனை நாரயம்பதி மாதா கோயிலின் மகிமைமிக்க மாதா சுருவத்தை மதுபோதையில் உடைத்து சேதப்படுத்திய சந்தேகத்தின் பேரில் வேலணையை சேர்ந்த 8 பேர் ஊர்காவற்றுறை பொலிசரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பெயரில் NPP என்னும் தேசிய மக்கள் சக்தியின் தீவக அமைப்பாளர் உள்ளடங்கலாக 8 பேரே பொலிசாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

மெரிஞ்சிமுனை நாரயம்பதி மாதா கோயிலின் மாதா சுருவத்தை மதுபோதையில் இருந்த 20 பேரடங்கிய கும்பல் ஒன்று உடைத்து சேதப்படுத்தியதாக ஊர்காவற்றுறை பொலிசாருக்கு குறித்த ஆலய நிர்வாகத்தினர் முறைப்பாடு செய்திருந்த நிலையில் பொலிசார் துரித நடவடிக்கையில் இறங்கியதனடிப்படையில் 8 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். ஏனையோர் கைதானவர்களின் தகவலின் அடிப்படையில் தேடப்பட்டு வருகின்றனர்.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

தேசிய மக்கள் சக்தியின் தீவக அமைப்பாளர் வேல்முருகன் மயூரன் உள்ளடங்கலாக 20 பேர் அடங்கிய குழுவினர் நேற்றையதினம் (25) குறித்த ஆலயத்தின் பகுதியில் இருந்து மது அருந்தியதாகவும் அவ்வாறான சந்தர்ப்பத்தில் சுற்றுலாவுக்காக வருகைதந்த சுற்றுலா பயணிகளுடன் தேவையற்ற வார்த்தை பிரயோகங்களை பயன்படுத்தி முரண்பட்டாதகவும் தெரிவிக்கப்படகின்றது.

இவ்வாறான பின்னணியில் கடும் மதுபோதையில் இருந்த குறித்த குழுவினர் இந்தியாவில் இருந்து கொண்டுவரப்பட்ட சுமார் 50 இலட்சம் பெறுமதியான மாதா சுருவத்தை அடித்து முழுமையாக உடைத்து சேதமாக்கிவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

கிறிஸ்தவ ஆலயத்தின் சுருவத்தை உடைத்ததையடுத்து குறித்த ஆலய நிர்வாகத்தினர் ஊர்காவற்றுறை பொலிசாருக்கு முறைப்பாடு செய்திருந்தனர். இந்து சமயத்தை சேர்ந்த தரப்பினர் உடைத்ததாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில் பொலிசார் நிலைமையை கருத்தில் கொண்டு துரித நடவடிக்கையில் ஈடுபட்டதன் அடிப்படையில் தேசிய மக்கள் சக்தியின் தீவக அமைப்பாளர் உட்பட 8 பேர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.