LOADING

Type to search

உலக அரசியல்

ஹமாஸ் அமைப்புக்கு என்னுடைய கடைசி எச்சரிக்கை – டிரம்ப்

Share

இஸ்ரேல் மீது கடந்த 2023-ம் ஆண்டு அக்டோபர் 7-ந்தேதி ஹமாஸ் அமைப்பு கொடூர தாக்குதல் நடத்தியது. அப்போது, எதிரில் தென்பட்ட நபர்களையெல்லாம், அந்த அமைப்பு துப்பாக்கியால் சுட்டும், தாக்கியும் படுகொலை செய்தது. நோவா இசை நிகழ்ச்சியில் பங்கேற்க சென்றவர்கள் உள்பட ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டதுடன், 250-க்கும் மேற்பட்டோர் பணய கைதிகளாக சிறை பிடித்து செல்லப்பட்டனர். 21 மாதங்களுக்கு மேலாக இஸ்ரேல் நடத்திய தாக்குதலில், காசா பகுதியில் 63 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் உயிரிழந்து உள்ளனர். 1 லட்சத்த்திற்கும் மேற்பட்டோர் காயமடைந்தும் உள்ளனர். இதனை காசா சுகாதார அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர். எனினும், இவர்களில் எத்தனை பேர் பொதுமக்கள் என்றோ அல்லது வீரர்கள் என்றோ விவரம் எதுவும் வெளியிடப்படவில்லை. நாங்கள் பயங்கரவாதிகளையே இலக்காக கொண்டு தாக்குதல் நடத்துகிறோம் என இஸ்ரேல் கூறுவதுடன், மக்கள் அடர்த்தியான பகுதிகளில் ஹமாஸ் அமைப்பினர் செயல்படுகின்றனர் என்றும் அதனால், பொதுமக்களின் உயிரிழப்புகள் ஏற்படுகின்றன என்றும் குற்றச்சாட்டாக கூறியுள்ளது. இந்நிலையில், போரை முடிவுக்கு கொண்டு வர மற்றும் பணய கைதிகளை விடுவிக்கும் முயற்சியும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதுபற்றி அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், ட்ரூத் சோசியல் சமூக ஊடகத்தில் வெளியிட்ட பதிவில், பணய கைதிகள் வீடு திரும்ப வேண்டும் என ஒவ்வொருவரும் விரும்புகின்றனர். இந்த போர் முடிவுக்கு வரவேண்டும் என ஒவ்வொருவரும் விரும்புகின்றனர். இஸ்ரேல் அரசு என்னுடைய விதிமுறைகளை ஏற்று கொண்டது. ஹமாஸ் அமைப்பும் இதனை ஏற்று கொள்ள வேண்டிய தருணம் வந்துள்ளது. அப்படி ஏற்று கொள்ளவில்லை என்றால், விளைவுகளை பற்றி ஹமாஸ் அமைப்புக்கு நான் எச்சரிக்கை விடுத்து இருக்கிறேன். இது என்னுடைய கடைசி எச்சரிக்கை. மற்றொரு முறை எச்சரிக்கமாட்டேன். இந்த விவகாரத்தில் கவனம் செலுத்தியதற்காக உங்களுக்கு நன்றி என தெரிவித்து உள்ளார்.