குறிந்தூர்மலை தொடர்பில் நாடாளுமன்றின் மேற்பார்வைக் குழுவில் ஆராயப்பட்டது.
Share
நடராசா லோகதயாளன்.
முல்லைத்தீவு குறுந்தூர்மலையில் 2,500 வருடத்திற்கு முன்பு பௌத்த ஆலயமே இருந்தது சைவ ஆலயம் இருக்கவில்லை பொங்க அனுமதிக்க முடியாது என சரத் வீரசேகர நாடாளுமன்றின் மேற்பார்வைக் குழுவில் கடும் தர்க்கத்தில் ஈடுபட்டார்.
முல்லைத்தீவு மாவட்டத்தின் குறுந்தூர்மலை ஆதிசிவன் ஆலய விவகாரம் நாடாளுமன்றின் கலாச்சார அமைச்சின் மேல்பாற்வைக் குழுவில் வியாழக்கிழமை (21) ஆராயப்பட்டது.
இதனபோது முல்லைத்தீவு மாவட்டம் குறுந்தூர்மலை ஆதிசிவன் ஆலய விடயம் நீதிமன்றின் கட்டளைவரை சென்றுள்ளபோதும் அதனைத் தொல்லியல்த் திணைக்களம் முழுமையாக ஆராயும் வகையிலேயே நாடாளுமன்றில் ஆராயப்பட்டது.
நாடாளுமன்ற கலாச்சார மற்றும் தொல்லியல் விவகாரகுழு, தொல்லியல்த் திணைக்கள அதிகாரிகள், மாவட்ட அரச அதிபர், மாகாண பிரதம செயலாளர், முல்லைத்தீவு பொலிஸ் அதிகாரி, கிளநொச்சி முல்லைத்தீவு பிரதிப் பொலிஸ்மா அதிபர் ஆகியோர் பிரசன்னமாகியிருந்தனர்.
இக்குழுவில் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர சர்ச்சைக்குரிய கருத்துக்களை முன்வைத்தபோது இவர்களிற்கான பதில் கருத்துக்களை நாடாளுமன்ற உறுப்பினர் இ்.சாள்ஸ் நிர்மலநாதன் முன் வைத்தார்.
இதன்போது குறித்த ஆலய சர்ச்சைக்கு யாழ்ப்பாணம் பல்கலைக் கழக தொல்லியல்த்துறையினையும் மாணவர்களையும் உள்ளடக்கி சமய விவகாரம், கலாச்சாரம், தொல்லியல் என 3 குழுவை உருவாக்கி அவர்களின் கண்காணிப்பில் விடும்போது சரச்சை ஏற்படாது என்ற கருத்தை வடக்கு மாகாண பிரதம செயலாளர் முன் வைத்தார்.
”எமது மாவட்டத்தில் வாழ்ந்த, தற்போதும் வாழும் மக்களிற்குச் சொந்தமான 17 ஏக்கர் நிலத்தையும் உள்ளடங்கியே 224 ஏக்கரை சுவீகரிக்க தொல்லியல்த் திணைக்களம் கோருவதனால் மக்களிற்கு கடும் விசணத்தை ஏற்படுத்துவதனால் மக்களின் 17 ஏக்கர் நிலத்தையும் விடுவிக்க வேண்டும்” என முல்லைத்தீவு மாவட்ட அரச அதிபர் உமாமகேஸ்வரன் கோரிக்கை விடுத்தார்.
இதனிடையே இச்சர்ச்சை தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் இ.சாள்ஸ் நிர்மலநாதன் தனது கருத்தில் ”1938 ஆம் ஆண்டு தொல்லியல் இடம் என வர்த்தமானி அறிவித்தல் 78 ஏக்கருக்கே உண்டு. அதேநேரம் 2018 வரையும் குறுந்தூர்மலையென இருந்த பகுதி 2020 இல் எவ்வாறு குறுந்தூர் விகாரையாக வர்த்தமானி வெளியிடப்பட்டது. அப்போது அமைச்சர் தலைமையில் ஆய்வு செய்ய வெளிக்கிட்டபோதே பல்கலைக் கழகத்தையும் இணைக்குமாறு நாம் கோரினோம் ஆனால் மறுக்கப்பட்டது.
இதன் பின்பே அங்கே இரகசியமாக விகாரையை அமைத்து பிக்கு பேட்டி வழங்குகின்றார். இருந்தபோதும் அங்கே விகாரை இல்லை எனத் தொல்லியல்த் திணைக்களம் கூறுகின்றது. பௌத்த பிக்குவோ அந்த விகாரையின் மேல் இருந்து இந்த விகாரையை உடைக்க வருகின்றனர் என செவ்வி வழங்குகின்றார் அவ்வாறானால் எது சரியானது.
குறுந்தூர்மலையில் ஆய்வின்போது வெளிப்பட்டது சிவலிங்கம் அது சிவ சின்னம் என சைவ மக்கள் தெளிவாக கூறும் நிலையில் தொல்லியல்த் திணைக்கள அதிகாரிகளாகிய நீங்கள் அந்தச் சின்னத்தை பௌத்த அடையாளம் என தெரிவித்து வருகின்றீர்கள். ஆனால் இதே படத்தை தொல்லியல்த் திணைக்களம் வவுனியா மாவட்டச் செயலகத்தில் காட்சிப்படுத்தி இது சிவன் சிலை என எழுதியுள்ளனர். அவ்வாறானால் எது சரி நான் கிறிஸ்தவன் நீங்களே பதிலைக் கூறுங்கள் இது சிவன் சிலையா அல்லது பௌத்த சின்னமா” என்பதனை என்று நாடாளுமன்ற உறுப்பினர் இ.சாள்ஸ் நிர்மலநாதன் கோரியபோது வடமாகாண பிரதம செயலாளரும் முன்னாள் மாவட்ட அரச அதிபருமான சுமன் பந்துல வவுனியா மாவட்டச் செயலகத்தில் அவ்வாறு படம் உள்ளதனை உறுதி செய்கின்றேன் என்றார்.
இங்கே தொடர்ந்தும் கருத்து தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் இ.சாள்ஸ் நிர்மலநாதன் குறுந்தூர்மலையில் “1999 வரை இல்லாத விகாரை இப்போது அமைப்பதோடு சிவன் ஆலயம் இருந்த இடத்தில் இப்ப விகாரை அமைப்பதே பிரச்சணை” என்றார்.
இவை தொடர்பில் தொல்லியல்த் திணைக்கள அதிகாரிகள் கருத்து தெரிவிக்கும்போது, 78 ஏக்கருக்கு வெளியில் தமிழர் நிலமான 17 ஏக்கரையும் விடுவித்து மேலதிகமாக 3 ஏக்கரை விடுவித்து அதில் ஒரு ஏக்கர் நிலத்தில் விகாரையினையும் ஒரு ஏக்கரில் சிவன் ஆலயத்தினையும் அமைப்பதோடு மேலும் ஒரு ஏக்கரை பொது இடமாகவும் பிரேரிக்கலாம் என ஆலோசணை முன்வைத்தனர்.
இதேநேரம் 17 ஏக்கரை விடுவிக்க அனைவரும் இணங்கியபோதும் தொல்லியல்த் திணைக்களத்தைச் சேர்ந்த சன்னஜெயசுமன 2010 முதல் 2015 வரை வடக்கில் எங்கே தொல்லியல் சின்னம் உள்ளது என அடையாளமிட்டுள்ளனர். அதனை வர்த்தமானி வெளியீடு செய்யவும இணக்கத்தை தாருங்கள் என்றபோது இது அதற்கான கூட்டம் இல்லை. இதனை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களிற்கு சமர்ப்பித்து பகிரங்கப்படுத்தி மக்களின் கருத்தின் பின்பே உது தொடர்பில் ஆராயலாம் என தொல்லியல்த் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் பதிலளித்தார்.
இறுதியல் இரு மத ஆலயங்களும் அமைத்து 17 ஏக்கர் நிலத்தையும் விடுவிப்பது தொடர்பிலேயே விசேட கவனம் செலுத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.